17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு உசச் நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: 17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், 17 மாவட்ட நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தி்ல 17 மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு விளம்பரம் செய்தது. இதையடுத்து 2 ஆயிரத்து 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைத்து அவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் 103 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இக்பால் தலைமையில் 6 நீதிபதிகள் அடங்கிய குழு நேர்காணல் நடத்தி 17 பேரை தேர்வு செய்தது.
அந்த 17 பேரின் நியமனம் குறித்த தமிழக அரசின் அரசாணை (எண் : 16 2011) ஆளுநரின் ஒப்புதலுடன் 5-1-2011 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் நேர்காணல் மதிப்பெண்களை வெளியிடுமாறு கோரியிருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து மணிகண்டன் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.எம். பாஞ்சால், ஹெச். எல். கோகலே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மணிகண்டன் சார்பில் வழக்கறிஞர் ஜி. சிவபாலமுருகன் ஆஜரானார்.
அவர் வாதாடுகையில், "நேர்காணல் மதிப்பெண் விவரங்களை வெளியிட மறுத்தது விதிமுறைகளுக்கு மாறானது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கூட தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 25-வது இடத்தில் உள்ளவரை நேர்காணலுக்கு அழைக்காமல் தர வரிசையில் 71, 79 ஆகிய இடங்களில் இருந்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்," என்றார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், 17 மாவட்ட நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications