ஜூலை 25-ல் சரணடைய வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலும், அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்த 32 பேரை விரட்டிவிட்டுவிட்டு அவர்களது வீடுகளை வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் அபகரித்ததாக புகார் உள்ளது.
அதே போல சேலம் சாரதா கல்லூரி சாலையில் பிரிமியர் ரோலர் மாவு மில் நிலத்தை ஆக்கிரமித்ததாகவும் இன்னொரு புகார் உள்ளது.
இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவரும் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான பாரப்பட்டி சுரேஷ்குமார் (கொலை வழக்குகளிலும் சிக்கியவர் இவர்), கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, மற்றும் ஜிம்.ராமு. மகேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிகடை பெருமாள், கொண்டலாம்பட்டி முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ. பாலகுரு மூர்த்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், கனகராஜ், கறிக்கடை பெருமாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகம் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வியாழன் அன்று நீதிபதி ராஜசூர்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் இந்த மனு தொடர்பாக அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அரசு தரப்பில் வழக்கறிஞர் ஐ. சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடுகையில், "மனுதாரர் அரசியல் செல்வாக்கு மிக்கவர். அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளை எளிதில் கலைத்துவிடுவார். அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்றார்.
இந்த நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டவை என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறியதாவது:
முன்ளாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்குள் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும். போலீசார் அவரை தங்கள் காவலில் எடு்த்து விசாரிக்கலாம்.
வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் போலீசார் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு அவரை 5-வது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அப்போது ரூ. 25 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து வீரபாண்டி ஆறுமுகம் வெளி வரலாம்.
பின்னர் தினமும் சம்பந்தப்பட்ட போலீசில் அவர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.












Click it and Unblock the Notifications