உள்ளாட்சி தேர்தல் கூட்டணி: தேர்தல் தேதி அறிவித்தபின் முடிவு-பாமக
சேலம் & நாமக்கல்: தமிழக உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிழரசு மீது நில மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த பொய் வழக்கு ஆகும்.
தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒருவரின் நிலத்தை யார் அபகரித்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்த நிலம் மீட்கப்பட வேண்டும் என்பதில் பாமகவுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே சமயம் மோசடியாக ஒரு புகார் கொடுத்து அதன் மீது விசாரிக்காமல் நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்புடையது அல்ல.
சமச்சீர் கல்வியை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதற்கு மேலும் கால நீடிப்பு செய்யக்கூடாது. ஏற்கனவே 2 மாத காலம் மாணவர்கள் பாட புத்தகங்கள் இல்லமல் படிக்க முடியாமல் காலம் வீணாகிவிட்டது. இனியும் அரசு இந்த விஷயத்தில் கெளரவம் பார்க்கக்கூடாது.
சமச்சீர் கல்வி தொடர்பான பாடங்கள் இணைய தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக தமிழக அரசு பாடநூல் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்படி இணைய தளத்தில் சமச்சீர் கல்வி பாடங்களை அவர்கள்தான் நீக்கியுள்ளனர். எனவே பாடநூல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது பற்றி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்றார்.
இந் நிலையில் நாமக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மணி, எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை முன் வைத்து கட்சியை நடத்துகின்றனர். நல்ல கொள்கைகளையும், திட்டங்களையும் உயர்ந்த கொள்கைகளையும் வைத்து பாட்டாளி மக்கள் கட்சி கட்சியை நடத்தி வருகிறது.
கட்சியின் தலைவர் ராமதாஸ் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற எந்த ஆசையும் இல்லாமல் பதவி ஆசை இல்லாமல் கட்சியை நடத்தி வருகிறார். கட்சியின் உயிர்மூச்சு சமூக நீதி கொள்கைதான்.
அனைத்து அணியினருக்கும் இடஒதுக்கீடு வகுக்க போராடிய ஒரே தலைவர் ராமதாஸ்தான். சட்டமன்ற தேர்தலில் 30 இடங்களில் போட்டியிட்ட பாமக 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். 27 தொகுதிகளை இழந்து விட்டோம். இதனால் பாமகவுக்கோ, ராமதாசுக்கோ நஷ்டம் இல்லை. அந்தந்த தொகுதி மக்களுக்குதான் நஷ்டம்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி கடந்த 10 ஆண்டுகளாக ராமதாஸ் போராடினார். அதன் அடிப்படையில்தான் சமச்சீர் கல்வியை அரசு நடைமுறைப்படுத்த கருணாநிதி உத்தரவிட்டார்.
அதேபோல் ஏழை மாணவர்கள் நுழைய முடியாத நுழைவுத் தேர்வை ரத்து செய்ய போராடியதன் அடிப்படையில் நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை பாமக கண்டித்தது. இதுபோன்ற பல்வேறு போராட்டங்களை பாமக நடத்தியும் சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களையே பெற முடிந்தது.
அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு கிடைக்கும் அதே மருத்துவ வசதி சாதாரண பொதுமக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும் பொதுமக்களின் தேவை அறிந்து தொடர்ந்து பாமக போராடும். பாமகவை யாராலும் அழிக்க முடியாது. டெபாசிட் இழந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்போது, 42 ஆயிரம் ஓட்டு வாங்கிய பாமக ஆட்சியை பிடிக்கும். சிலர் கட்சியை விட்டு விலகி சென்றாலும், மீண்டும் வந்தால் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications