காங்கிரஸ் கூட்டணி தொடரும்; மத்திய அமைச்சரவையில் 2 இடங்களும் காலியாக இருக்கும்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
கோவை: காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என்று பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

பொதுக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், இன்று கூடிய திமுக பொதுக் குழுவில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் காலியாக உள்ள இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு திமுக தரப்பில் இருந்து யாரையும் பரிந்துரைக்கப் போவதில்லை. திமுகவுக்காக மத்திய அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அந்த இரண்டு இடங்களும் காலியாகவே இருக்கும் என்றும் பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைமையில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.

முன்னதாக பொதுக் குழுவில் அவர் உரையாற்றுகையில், நேற்றும் இன்றும் கோவை நகரத்தில் நடைபெறுகின்ற தலைமைக் கழகத்தினுடைய செயற்குழு-பொதுக்குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை, நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். வாழ்த்துக்களை தெரிவிப்பதும், நன்றியை தெரிவிப்பதும் நீங்கள் பெற்ற பேறுக்குப் பிறகும் இந்தக்கலம் கடலில் செல்லுமா, செல்லாதா என்ற கேள்விக்குறி ஜனநாயக அரசியல் அரங்கில் எழுந்த பிறகும்,
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் தோல்விகளுக்கு பிறகும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை, கோட்பாடுகளுக்கு இடையில் எந்த விதமான மனச்சங்கடமும் வெற்றி தோல்வியால் வராமல் முறையே மனமகிழச்சியும், அந்த மகிழ்ச்சியின் காரணமாக ஏற்படுகின்ற ஆரவாரம், வெறித்தனமான கூச்சல் இவைகளுக்கெல்லாம் இடம் தர மாட்டோம் என்பதை பல மேடைகளிலே நாம் தமிழ் நாட்டு மக்களுக்கு, இந்திய திருநாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றோம்.

பல பேர் எதிர்பார்த்தார்கள், இன்றைக்கு காலையிலே கூட பத்திரிகைகளைப் பார்த்தால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றம். நேற்று நடைபெற்ற செயற்குழுவில் பெரிய கலவரங்கள் தோன்றும், பெரிய அமளிகள் தோன்றும், புயல் வீசும். அந்தப் புயல் காற்றை நாம் நம்முடைய கட்சிக்கு தென்றலாக ஆக்கிக் கொள்ளலாம் என்று எண்ணியவர்கள் எல்லாம் ஏமாந்தார்கள் என்பதுதான் நேற்றையதினம் நாம் நடத்திக் காட்டிய செயற்குழுவின் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது.

அதே ரீதியில், நம்முடைய பொதுக்குழுவையும் கட்டுப்பாட்டோடு, அமைதியோடு, அரசியல் எழுச்சியோடு, நடத்த வேண்டிய பெரும் பொறுப்பிலே இன்றைக்கும் நாம் இருக்கின்றோம். சில பத்திரிகைகாரர்கள், அவசரக்கார அரசியல்வாதிகள் என்ன எண்ணிக் கொண்டார்கள்? ஏதோ பொதுக்குழு கூடுகிறதென்றால் இந்தப் பொதுக்குழுவிலே தலைவர் யார்? பொதுச்செயலாளர் யார்? மற்ற செயலாளர்கள் யார்? என்றெல்லாம் தேர்தல் நடைபெறும் என்றெண்ணி பலபேர் கணக்குப் போட்டார்கள். அவர்களுடைய கணக்கு தவறானது என்பதை இன்றைக்கு வந்துள்ள தினசரி ஏடுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பொதுக்குழு கூடுவது ஒரு சட்ட திட்டத்தின்படி ஏற்பட்ட ஒன்றாகும். ஏதோ வெறுமனே நாங்கள் 10 பேர் சேர்ந்தால் அப்படி ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் செயற்குழு என்றும், அந்த சந்தர்ப்பமே 100 பேர் கொண்டதாக அமைந்தால் அது பொதுக்குழு என்றும் திராவிட முன்னேற்ற கழத்திலே ஆவதில்லை. ஒரு காலம் இருந்தது, அறிஞர் அண்ணா இந்த கழகத்தை தொடங்கிய காலத்தில் 100 பேர்கொண்ட பொதுக்குழு இரு நூறு பேர் கொண்ட பொதுக்குழு என்றெல்லாம் வளர்ந்து இன்றைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருக்கின்ற ஒரு பொதுக்கூட்டத்தை போன்ற சிறப்புக் கூட்ட தைத் போன்ற பொதுக் குழுவாக இன்றைக்கு அமைந்திருக்கிறதென்றால், இது நம்முடைய கழக வளர்ச்சியை காட்டுகின்ற ஒன்றாகும்.

இடையிலே ஏற்பட்ட தேர்தல் தோல்விகளை நீங்கள் எண்ணிப்பார்த்துக் கொண்டு இங்கே அமர்ந்திருக்க தேவையில்லை. ஏனென்றால் தேர்தல் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இலக்கல்ல. அதிலே வெற்றி பெறுவது என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய விடாப்பிடியான கொள்கையுமல்ல. தேர்தல் நாம் நடந்து செல்கின்ற பாதையில், மக்களுடைய ஆதரவை எந்தளவிற்கு பெற்றிருக்கிறோம் என்ற கணக்கை நாம் பார்ப்பதற்கு பயன்படுகின்ற ஒன்றே தவிர, அதுவே முடிவானது அல்ல.

அந்த வகையிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்த தேர்தல் தோல்வி, நம்மை அசைக்காது, அசைக்க முடியாது. என்றைக்குமே திராவிட முன்னேற்றக் கழகத்தை நிலைகுலையச் செய்யக்கூடிய ஆற்றல், இத்தகைய வெற்றித் தோல்விகளுக்குக் கிடையாது.

வெற்றியிலும் நாம் வீராப்பு கொண்டு அலைந்ததில்லை. தோல்வியிலும் நாம் துவண்டு போனதில்லை. அதனால்தான், ஏறத்தாழ ஒரு 50 ஆண்டு காலத்திற்கு மேலான வரலாற்றைப் படைத்த திராவிட இயக்க வரலாற்றில் நாயர், தியாக ராயர், நடேசனார் போன்ற இப்படிப்பட்ட பெரும் மேதைகள் எல்லாம் வளர்த்து, அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்களுடைய கையிலே ஒப்படைக்கப்பட்ட திராவிடர் இயக்கம், அவரால் வளர்க்கப்பட்டு, உணர்ச்சியூட்டப்பட்டு, உத்வேகம் தரப்பட்டு, அதன் பின்னர், அறிஞர் அண்ணா அவர்களுடைய கரங்களிலே இந்த இயக்கம் வந்து, இந்த இயக்கத்திற்கு ஒரு அரசியல் வண்ணம் கிடைத்து,

திராவிட முன்னேற்றக் கழகம் தெருவிலே நின்று கூச்சல் போட்டு பயனில்லை. உள்ளே வந்து பேசுங்கள், என்று காமராஜரே நமக்கெல்லாம் அன்பழைப்பு கொடுத்து, அவருடைய அழைப்பை புறக்கணிக்கக் கூடாது என்ற பெருந்தன்மையோடு, நாமும் சட்டமன்றத்திற்கு முதலில் 15 பேர்களாக, அடுத்து 50 பேர்களாக, அதற்கடுத்து ஆட்சிக் கட்டிலிலே அமரக்கூடிய அமைச் சர்களைப் பெறுகின்ற அளவிற்கு நாம் வளர்ந்து, பல வெற்றிகளை இடையிடையே பெற்று, அதற்கிடையே தோல்விகளைச் சந்திக்கின்ற சூழ்நிலைக்கு உள்ளாகி, இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன முடிவெடுக்கப் போகிறது. தோற்றுப் போன ஒரு கட்சி.

சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாகக் கூட அமைகிற வாய்ப்பற்றுக் போன ஒரு கட்சி, என்ன முடிவெடுக்கப் போகிறது என்று நம்மைப்பார்த்து ஏளனப் புன்னகையோடு, இவர்களா மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறார்கள்? என்கின்ற அலட்சியப் புன்னகையோடு, நம்மை சந்திக்கின்ற, நம்மைப்பற்றி சிந்திக்கின்ற யாராக இருந்தாலும், அவர்கள் எல்லாம் மலைக்கின்ற அளவிற்கு மாநாடு போல இன்றையப் பொதுக்குழு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நான் நேற்றைய தினம், நடைபெற்ற நம்மு டைய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எல்லாம் தொகுத்து அந்த அடிப்படையிலே, இன்றைக்கு பொதுக்குழு வின் தீர்மானங்களாக வடித்தெடுத்து, நானும் பேராசிரியரும், நம்முடைய தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து பேசி, தீர்மானக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை எல்லாம் உங்கள் முன்னால் இன்றைய தினம் வைக்க இருக்கின்றோம். அவைகள் ஒவ்வொன்றாக அந்த தீர்மானக்குழுவின் சார்பாக இங்கே எடுத்து வைக்கப்படும். அவற்றை நீங்கள் ஏற்று உங்கள் கையொலி மூலம் அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கழகத்தினுடைய தீர்மானக் குழு இது தலைமைக் கழகமே ஆலோசித்து யார்- யார் தீர்மானங்களை வகுத்துத் தரக் கூடியவர்கள் என்று யோக்கியதாம்சம் பார்த்தல்ல, யார் யாருக்கு இந்த பொறுப்பை பகிர்ந்து கொடுக்கலாம் என்ற அந்த நிலையிலே கூட, பகிர்ந்து கொடுக்கப்படும் போது, இவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் யார் யார் என்பதையெல்லாம் ஏற்கனவே நடைபெற்ற பல பொதுக்குழுக்களில் நமக்கு கிடைத்த அனுபவங்களை கொண்டு தீர்மானக்குழுவின் தலைவராக பொன்.முத்துராமலிங்கம், செயலாளராக குழந்தை தமிழரசன், இணைச் செயலாளராக சத்தியமூர்த்தி, உறுப்பினர்களாக சுப்பையன், ஆதி சங்கர் எம்.பி., வைத்தியலிங்கம், சி.முத்து சாமி, ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த தீர்மானக் குழுவின் சார்பில் முதலில் குழுவினுடைய தலைவர் பொன்.முத்துராமலிங்கம், தொடங்கி, செயலாளரும், இணைச் செயலாளரும், உறுப்பினர்களும் அவர வர்கள் தீர்மானங்கள் எண்ணிக்கை இருப்பதைந்து இவைகளைப் பங்கீட்டு கொண்டு உங்கள் முன்னால் தீர்மானங்களை வைப்பார்கள். நீங்கள் தயவு செய்து இந்த தீர்மானங்களை உங்களுடைய செவியால் ஏற்பது மாத்திரமல்ல, சிந்தையிலும் கொள்ள வேண்டும். அத்தனை பேரும் தீர்மானத்திலே தங்களுடைய உள்ளத்தை பதியவைத்து அந்த தீர்மானங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிறைவேற்றித் தரவேண்டும் என்று நான் ஆணையிடவில்லை, ஆசைப்படுகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+