திகார் சிறையில் ராசாவிடம் இன்று சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை!

ராசா அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் வைத்து இந்த விசாரணை நடக்கிறது. இதற்காக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கூடுதல் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் 2 பேர் டெல்லி சென்றுள்ளனர்.
ராசா தவிர, இந்த வழக்கில் கைதாகியுள்ள ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் உயர் அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்தர் பிபாரா உள்ளிட்ட 6 பேரிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தவுள்ளது.
முன்னதாக இதற்கான அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் கடந்த 21ம் தேதி வருமான வரித்துறை கடிதம் எழுதியது. அதற்கு ஓ.பி.சைனி அனுமதி அளித்தார்.
இதையடுத்து சென்னையில் இருந்து, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் 2 பேர் இன்று டெல்லியில் திகார் சிறையில் வைத்து ராசா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
பிற்பகலில் இந்த விசாரணை நடக்கவுள்ளது.
ராசாவின் வீடு, உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட நிதி ஆதாரங்கள் தொடர்பான ஆவணங்கள் குறித்து அவர்கள் விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து ராசா உள்ளிட்ட அனைவரிடமும் மும்பை வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளனர். எடிசலாட் டி.பி. நிறுவனத்துக்கு ராசா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது குறித்து விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. இந்த விசாரணை எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications