புகார் வாபஸ்..ஆனாலும் கலாநிதி மாறனுக்கு போலீஸ் மீண்டும் சம்மன்!

சேலத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர்கள் செல்வராஜ் மற்றும் சண்முகவேலு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்த மனுவில் சன் பிக்சர்ஸ் தலைவர் சக்சேனா மீது தாங்கள் கொடுத்த புகார்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார்களை வைத்தே கலாநிதி மாறனை போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
ஜூலை 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கலாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 26ம் தேதி வரை தனக்கு அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். ஆனால் ஜூலை 26ம் தேதியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந் நிலையில், புகார் கொடுத்தவர்களே அதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து கலாநிதி மாறனை எப்படியாவது இதில் சிக்க வைக்க வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள காவல்துறை, மேலும் ஏதாவது ஆதாரங்கள் கிடைக்காதா என்று தேட ஆரம்பித்துள்ளதோடு, இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடமும் ஆலோசனை கேட்டுள்ளனர்.
புகார் வாபஸ் பெறப்பட்டுவிட்டாலும், கலாநிதி மாறனுக்கு நேற்று போலீசார் மீண்டும் புதிதாக ஒரு சம்மன் அனுப்பியுள்ளனர். இத் தகவலை சென்னை அசோக்நகர் உதவி கமிஷனர் குருசாமி உறுதி செய்தார். மாறனின் வீட்டில் அந்த சம்மன் தரப்பட்டது என்றார்.
செல்வராஜ் மற்றும் சண்முகவேலு ஆகியோர் கொடுத்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்பதால் கலாநிதி மாறன் ஜூலை 28ம் தேதி காலை 11 மணிக்கு கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications