திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமைக்கப் போவதாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக தலைமை பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைப்பது என்றும் பாமக முடிவு செய்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு பலத்த அடி கிடைத்தது. திமுக கூட்டணியில் முதல் ஆளாகச் சேர்ந்து 30 தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சிக்கு நாமம் போடுவது போல 3 தொகுதிகளில் மட்டுமே மக்கள் வெற்றி கொடுத்தனர்.

தங்களது தோல்விக்கு திமுகவுடன் சேர்ந்ததே காரணம், திமுக மீதான ஊழல் புகார்கள் தங்களையும் பாதித்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில் கட்சியின் மாவட்ட அளவிலான பொதுக் குழுக் கூட்டங்களை நடத்தி வந்த பாமக இன்று தலைமை பொதுக் குழுக் கூட்டத்தை சென்னையில் கூட்டியது.

டாக்டர் ராமதாஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காலையில் தொடங்கிய கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர்.

கட்சியின்பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் பேசுகையில், இனி திமுகவுடன் மட்டுமல்ல, அதிமுகவுடனும் கூட்டு சேரக்கூடாது. தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக புதிய அணியை உருவாக்க வேண்டும். இனி வரும் எந்த தேர்தலிலும் நாம் சீட் கேட்கின்ற நிலை ஏற்படக்கூடாது. நாம் தான் சீட் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரசியல் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த கட்சிகள் தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்கின்றனர். தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசியலில் இருந்து சினிமா முற்றிலுமாக ஒதுக்கப்பட வேண்டும். சினிமா தொடர்பே இல்லாமல் பாமக ஆட்சியமைக்க வேண்டும்.

நமது வலிமையை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுகவினரின் செயல்பாடுதான் நாம் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். இதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வருங்காலத்தில் மருத்துவர் ராமதாஸ் ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் பேசினர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவை பொதுக்குழு எடுத்தது. மேலும், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைக்கப் போவதாகவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவுகளை பொதுக்குழுவில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார். அப்போது உறுப்பினர்கள் ஒருமனதாக கைகளைத் தட்டி வரவேற்றனர்.

ஜி.கே.மணி மேலும் கூறுகையில், தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், அதிமுக, திமுக என யாருமே மக்களுக்கு நல்லது செய்யவில்லை. எனவேதான் இவர்களுடன் சேராமல் மாற்று அணியை அமைக்க பாமக முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்லாமல் இனி வரும் தேர்தல்களிலும் மாற்று அணி அமைத்தே பாமக தேர்தல்களை சந்திக்கும். திமுகவுடன் மட்டுமல்லாது, அதிமுகவுடனும் அது கூட்டணி சேராது என்றார்.

திமுகவை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு

முன்னதாக கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ காடுவெட்டி குரு திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்த போதிலும், பாமகவினருக்கு எந்தவித ஒத்துழைப்பையும் திமுகவினர் தரவில்லை. மாறாக வேண்டும் என்றே நாம் தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டனர். சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+