தூத்துக்குடி தலைமைத் தபால் நிலையத்தில் கிணற்றில் கிடந்த தபால்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தில் உள்ள கிணற்றில் கிடந்த தபால்களால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரணையில் ஊழியர்களே வீசியது தெரிய வந்தது.
திருச்செந்தூர் சாலையில் உள்ளது தூத்துக்குடி தலைமை தபால் நிலையம். இங்குள்ள கிணற்றை கடந்த சில நாட்களுக்கு முன் தூர் வாரினர். அப்போது கிணற்றுக்குள் நூற்றுக்கணக்கான தபால்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தலைமை தபால் நிலைய அதிகாரி ராஜா கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உதவிகோட்ட கண்காணிப்பு அலுவலர் மகபூப் அலி, அஞ்சல்துறை ஆய்வாளர் வசந்தா சிந்துதேவி ஆகியோர் தலைமை தபால் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கிணற்றுக்குள் கிடந்த பட்டுவாடா செய்யப்படாத தபால்களை எந்த பகுதிக்கு செல்ல வேண்டியது என்றும், அந்த பகுதியின் போஸ்ட்மேன் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். அதில் சுமார் 4 எல்கைக்கு உட்பட்ட போஸ்ட்மேன்களில் தபால்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த தபால்கள் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய தபால்கள் இல்லை என்றும், போஸ்ட்மேன்கள் தங்களுக்கு பகுதிக்கு கூடுதல் சேவை நடைபெறுகிறது என்பதை காண்பிக்க அவர்களாகவே நூற்றுக்கனக்கான போஸ்ட்கார்டுகள், கடிதங்களை எழுதி தபால் பெட்டியில் போட்டு விட்டு அவற்றை மீண்டும் எடுத்து கிணற்றில் போட்டது தெரிய வந்தது.
தபால் குறைவாக பட்டுவாடா செய்யப்படும் பகுதிகளை அருகிலுள்ள பகுதியோடு இணைத்து விட்டு அதில் உள்ள போஸ்டுமேன்களை வேறு இடத்திற்கு மாற்றி விடுவதாலும்,அந்த பணியிடம் குறைக்கப்படுவதாலும் அதிலிருந்து தப்பிக்கவும், அதே இடத்தில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications