ஸ்லோவேகியா அனுப்பப்பட்ட கூரியர் பார்சலுக்குள் உயிருடன் பாம்பு- சென்னையில் மீட்பு
சென்னை: திருச்சியிலிருந்து ஸ்லோவேகியா நாட்டுக்கு அனுப்பப்பட்ட பார்சலை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் திறந்து பார்த்தபோது அதில் அரிய வகை பாம்பு உயிருடன் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சியிலிருந்து ஸ்லோவேகியா நாட்டு முகவரிக்கு ஒரு கூரியர் பார்சல் அனுப்பப்பட்டது. இந்த பார்சல் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்குள்ள சரக்குப் பெட்டகப் பகுதியில் பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்த பார்சல் குறித்து அவர்களுக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து அந்தப் பார்சலைத் திறந்து பார்த்தனர். அப்போது பார்சலுக்குள் ஒரு பாம்பு உயிருடன் வளைந்து நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அது அரிய வகை பாம்பாகும்.
பார்சலுக்குள் பாம்பு இருப்பதைப் பார்த்து குழம்பிப் போன அதிகாரிகள், அந்தப் பார்சலில் இடம் பெற்றிருந்த முகவரி குறித்து விசாரித்தபோது அப்படி ஒரு முகவரியே இல்லை என்பது தெரிய வந்தது. எனவே அது போலி முகவரி என்பது உறுதியானது.
இதையடுத்து முதலில் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்த அதிகாரிகள் இதுகுறித்து விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications