எதியூரப்பாவும், குடும்பத்தினரும் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்- ஹெக்டே

இன்று கர்நாடக அரசிடம் லோக் ஆயுக்தாவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. இதைத் தடுக்க, ஒடுக்க பாஜக அரசு முற்றிலும் தவறி விட்டது.
முதல்வர் எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரும் நேரடியாகவே சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத சுரங்கத் தொழில் காரணமாக அரசுக்கு ரூ. 16,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் குடும்பத்தினருக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பெருமளவில் நன்கொடைகளை அளித்து வருகின்றன. முதல்வர் குடும்பத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை ரூ. 10 கோடி வரை பெற்றுள்ளது. இவற்றை காசோலைகளைக் கொண்டு நாங்கள் கண்டுபிடித்தோம்.
லோக் ஆயுக்தா அறிக்கையின் நகல் ஆளுநர் பரத்வாஜுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் ஹெக்டே.
லோக் ஆயுக்தா தாக்கல் செய்துள்ள அறிக்கை மொத்தம் 25,220 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக 4 லட்சம் கோப்புகளை அதிகாரிகள் படித்துப் பார்த்ததாக சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
ஏராளமான அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் செயல்கள் குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஹெக்டே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications