சமச்சீர் கல்வித் திட்டம் கோரும் போராட்டத்தை மாணவர்கள் வெற்றியாக்க வேண்டும்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்திநடைபெறவுள்ள வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை மாணவர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை:

நாங்கள் அவசரப்படவில்லை

தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது சமச்சீர் கல்வித்திட்டத்தை அவசரமாக கொண்டு வந்து விட்டதை போலவும், அதனால் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களின் தரத்தை உயர்த்தவும், உயர் மட்டக்குழு அமைத்து, அது குறித்து ஆராய அவகாசம் தேவைப்படுவதாலும் இந்த ஆண்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

தி.மு.க. ஆட்சியிலே சமச்சீர் கல்வித்திட்டம் அவசர அவசரமாக கொண்டுவரப்படவில்லை. 2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று அறிவித்திருந்தோம். அந்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வி திட்டத்தை தனது முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றி அறிவித்து விடவில்லை.

சமச்சீர் கல்வித்திட்டம் பற்றி அரசுக்கு பரிந்துரைகளை தருவதற்காக 8.9.2006 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் கல்வியாளர்களை கொண்ட ஒரு குழுவினை தமிழக அரசு அமைத்தது. அந்தக்குழு இதைப்பற்றி நன்கு ஆய்வு செய்து தனது ஆய்வறிக்கையை அரசின் பரிசீலனைக்காக அளித்தது. அவ்வாறு அந்த குழு பரிந்துரைகளை அளித்தவுடன் தமிழக அரசு அப்படியே அவற்றை ஏற்றுக்கொண்டு சமச்சீர் கல்வித்திட்டத்திற்காக சட்டம் கொண்டு வந்து விடவில்லை.

அந்தக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க எம்.பி. விஜயகுமாரை ஒரு நபர் குழுவாக தமிழக அரசு நியமித்தது, எஸ்.முத்துக்குமரன் ஆய்வறிக்கையினை அந்த ஒரு நபர் குழு பரிசீலனை செய்து-சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியது. அதன்பின்னரும் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பரிசீலிக்க, பிற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டங்கள் தேர்வுமுறைகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அதிகாரிகளை கொண்ட கல்வியாளர்கள் குழு ஒன்று அரசினால் 30.10.2008-ன் படி, அமைக்கப்பட்டது.

குஜராத், கேரளா, கர்நாடகா போய் ஆய்வு

அந்த கல்வியாளர்கள் குழு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையினை அரசுக்கு வழங்கியது. இந்த குழுக்களையெல்லாம் அமைத்து அவர்கள் பல மாதங்கள் ஆய்வு செய்து பரிந்துரைகளையெல்லாம் அளித்த பிறகு தான், அதாவது சுமார் 4 ஆண்டுகள் பரிசீலனை செய்த பின்னர் தான் 2010-ம் ஆண்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான சட்டம் 1.2.2010 அன்று தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.

சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகும், அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் 1.3.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கல்வியாளர்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு சமச்சீர் கல்விச்சட்டத்தின் படி, 2010-2011-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டன. சமச்சீர் கல்வி முறையை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தலாம் என்றும், முதற்கட்டமாக 2010-2011 கல்வி ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், அதனை தொடர்ந்து 2011-12 கல்வி ஆண்டில் பிற எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும், நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

சமச்சீர் கல்விக்கு சாதகமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணைக்கு இடைக்காலத்தடை வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. முதற்கட்டமாக 2010-2011 கல்வியாண்டில் முதல் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் முதலாம் வகுப்பு தேவையான 61 லட்சம் பாடப்புத்தகங்களும் 6-ம் வகுப்புக்கு தேவையான 84 லட்சம் பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களைப்படித்து முடித்துள்ளார்கள்.

அரசின் கொள்கை முடிவின்படி 2011-2012 கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன. இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

பிடித்த முயலுக்கு மூனே கால்

எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் - அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் - என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்தக் காலக் கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான். தி.மு.க.வின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை. அதனை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான், எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித்தனமாக அதனை அறிவித்துவிடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து, அந்தக் குழுக்களை கொண்டு வெளி மாநிலங்களுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் செய்ய செய்து, அதன் பிறகுதான் படிப்படியாக சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, அது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் ஆகியும் இந்த ஆண்டு தாங்கள் என்ன பாடப்புத்தகங்களை படிக்க விரும்புகிறோம் என்பதே தெரியாத நிலையில் மாணவ செல்வங்களும், அவர்களின் பெற்றோர்களும் தவித்துப் போய் இருப்பதைப் பற்றி தமிழக அரசு கவலையேபடாமல் இதனை கவுரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்டு நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மதிக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்தையும் கேட்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

அதனால்தான் தி.மு.க. சார்பில் 29-7-2011 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை மாணவ செல்வங்கள் புறக்கணித்து, தங்களுக்குள்ள எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். மாணவர்கள் நினைத்தால் எதிலும் வெற்றிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அறப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைதி வழி - அறவழி, அதுவே அண்ணா வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+