மீனவர்களுக்கு அடி-உதை: சிங்கள கடற்படை அட்டூழியம்!
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை சிங்கள கடற்படையினர் அடித்து உதைத்து வலைகளை பறித்து விரட்டி அடித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், மீனவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருப்தாக கூறியும், கடல் எல்லையை தாண்டி வருவதாக கூறியும் அவர்கள் மீது சிங்கள கடற்படையினர் அடித்து உதைத்தும் தாக்கி வருகின்றனர்.
கடந்த மே மாதம் 23 மீனவர்களை சிங்கள கடற்படையினர் சிறை பிடித்து சென்று இலங்கை சிறையில் அடைத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் 23 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் 500 படகுகளில் 1,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சிங்கள கடற்படையினர் 4 ரோந்து படகுகளில் 20க்கும் மேற்பட்டோர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் ஒலிபெருக்கி மூலம் ராமேஸ்வரம் மீனவர்களை பார்த்து இங்கு மீன் பிடிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதில் ஒரு மீனவர் படகை சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்து படகில் இறக்கி அதில் இருந்த 4 தமிழக மீனவர்களையும் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த 4 மீனவர்களும் படுகாயம் அடைந்தனர்.
பின்பு படகில் இருந்த வலைகள் மற்றும் மீன்களை பறித்து கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என திரும்பினர்.
7ம் தேதி பாஜக கடல் முற்றுகை போராட்டம்-சுஷ்மா பங்கேற்பு:
இந் நிலையில் இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களை காக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து பாஜக சார்பில் ராமேஸ்வரத்தில் வரும் 7ம் தேதி கடல் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.
இது குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தற்போது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை இலங்கை கடற்படை தாக்கி வருகிறது.
தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் வரும் 7ம் தேதி கடல் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications