'95 சதவீத மாணவர்கள் வந்தனர்...'- சொல்கிறது தமிழக அரசு
சென்னை: சமச்சீர் கல்விக்கு ஆதரவாக திமுக போராட்டம் அறிவித்து இருந்தபோதிலும் நேற்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல நடைபெற்றதாகவும், 95 சதவீத மாணவ-மாணவிகள் வந்திருந்ததாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
தி.மு.க. அறப்போராட்டம்
'சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி 29-ந்தேதி (நேற்று) அறப்போராட்டம் நடைபெறும் என்றும் இதில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாக்க அந்தந்த கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளும் பாதுகாப்புடன் நடைபெற பாதுகாப்பு கேட்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி, தொடக்ககல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் அறிவுரை வழங்கி இருந்தனர்.
தனியார் பள்ளிகள் முன்பு போலீஸ் ரோந்து
இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் முன்பு போலீஸ் அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்தனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் முன்பு நிறைய போலீசார் காணப்பட்டனர்.
பள்ளிக்கூடம் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்களை யாராவது தடுத்து நிறுத்துகிறார்களா என்று போலீசார் கண்காணித்தனர். இதற்காக அவர்கள் காலை 7 மணி முதல் ரோந்து சுற்றி வந்தனர்.
வழக்கம்போல வகுப்புகள்...
தமிழ்நாடு முழுவதும் எத்தனை சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்? என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வசுந்தராதேவியிடம் நிருபர்கள் கேட்டனர். அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் நேற்று திறந்திருந்தன. ஆசிரியர்கள் வருகை தந்தனர். மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் மாணவர்கள் வருகை சதவீதத்தை தந்துள்ளனர். எத்தனை மாணவ-மாணவிகள் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் 95 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சரவணப்பட்டி, தருமபுரி மாவட்டம் ஒட்டம்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் மொரப்பாக்கம், கடலூர் மாவட்டம் வடலூர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களை சில அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் மாணவ-மாணவிகள் அதை பொருட்படுத்தாமல் பள்ளிகளுக்கு வந்தனர்," என்றார்.
தொடக்க கல்வி இயக்குனர் ப.மணி கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொடக்க கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறந்திருந்தன. எந்தவித அசம்பாவிதமும் இன்றி பள்ளிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் வந்திருந்தனர். மாணவர்கள் 94 சதவீதம்பேர் வந்திருந்தனர்'' என்றார்.
எச்சரிக்கப்பட்ட ஆசிரியர்கள்
அரசுத் தரப்பில் இப்படிச் சொன்னாலும், பல அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை கணிசமாகக் குறைந்திருந்தது. ஆசிரியர்கள் மட்டும் தவறாமல் வந்திருந்தனர். விடுப்பு எடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்ததாலேயே தவறாமல் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications