சமச்சீர் கல்வி போராட்டம்: ஆயிரத்துக்கும் அதிகமான திமுகவினர் கைது!
சென்னை: சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தக் கோரி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணியினர் நடத்திய போராட்டத்தில் கைதானவர்கள் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமச்சீர் கல்வி ஆதரவுக்கு வலுச் சேர்க்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வேலைக்குச் செல்லாமல் புறக்கணிக்க வேண்டுமென்ற தலைமைக் கழகத்தின் அறிவிப்பிற்கிணங்க, தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பள்ளிகள் தோறும் சமச்சீர் கல்வி கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அறப்போர்க் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
சென்னை, சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் கைது செய்து செய்யப்பட்டனர். திருவிக நகர் பகுதி கழக செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் கைது
தூத்துக்குடி நகரத்தில புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோரும் கோவில்பட்டி நகரத்தில் நகரச் செயலாளர் ஆர்.ராமர், கோவில்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.முருகேசன் உள்பட 300-க்கும் மேற்பட்டோரும் அறப்போர் கிளர்ச்சியில் பங்கேற்றனர்.
பாளையங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லியில் இளைஞர் அணியினைச் சேர்ந்த நடு குத்தகை ராஜி, பூவை ஜெயக்குமார் மற்றும் 50-க்கும் மேற்படோர் பங்கேற்றனர். திருமழிசையில் பேரூர்க் கழகச் செயலாளர் முனியசாமி மற்றும் இளைஞர் அணி ஜெ.மகாதேவன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்
பொன்னேரி மற்றும் மீஞ்சூரில் ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் சுந்தரம் தலைமையில் 162 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டில் அரசு கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் நகரில் உள்ள ஏழு பள்ளிகளில் தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணி மற்றும் நிர்வாகிகள் துண்டுபிரசுரம் அளித்து முழக்கமிட்ட போது 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications