70 எம்.எல்.ஏக்களுடன் ஊர்வலமாக போய் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எதியூரப்பா!

சுரங்க ஊழலில் சிக்கிய எதியூரப்பாவை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இதற்கு ஒத்துக் கொண்ட போதிலும் தான் ஜூலை 31ம் தேதிதான் பதவி விலகுவேன் என்று கூறி விட்டார் எதியூரப்பா. மேலும், சதானந்த கெளடாவை முதல்வராக்க வேண்டும், தன்னை மாநில பாஜக தலைவராக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.
இந்த நிலையில் திடீரென பெருமளவிலான எம்.எல்.ஏக்கள் எதியூரப்பாவுக்கு ஆதரவாக கிளம்பியதால் புதிய முதல்வரைத் தேர்வு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது பாஜக மேலிடம். இதனால் இதுவரை யார் அடுத்த முதல்வர் என்பது முடிவாகாமலேயே உள்ளது.
இந்த நிலையில் எதியூரப்பாவின் சில நிபந்தனைகளை ஏற்க பாஜக மேலிடம் முன்வந்ததாக தெரிகிறது. அதாவது அவர் கூறிய நபரை முதல்வராக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சதானந்த கெளடா முதல்வராகக் கூடும் என்று தெரிகிறது. அதேசமயம், எதியூரப்பாவுக்கு மாநில தலைவர் பதவி தர பாஜக மேலிடம் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரும் சஸ்பென்ஸ் மற்றும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு அனுப்பி வைத்தார் எதியூர்பபா. கட்சித் தலைமைக்கு தான் முழு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருப்பதாகவும் அவர் கத்காரியைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
முன்னதாக ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்க என்ன காரணம் என்பதையும் எதியூரப்பா தனது கடிதத்தில் விளக்கியிருந்தார். ஆடி அமாவாசை காரணமாகவே தான் ராஜினாமா கடிதத்தை தாமதம் செய்ததாக அவர் கூறியிருந்தார்.
மாலையில் ஊர்வலம்
இதையடுத்து இன்று மாலை தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாக கிளம்பினார் எதியூரப்பா. கிட்டத்தட்ட 70 எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களில் சர்ச்சைக்குரிய ரெட்டி சகோதரர்களும் அடக்கம்.
அனைவரும் எதியூரப்பாவின் வீட்டிலிருந்து பெரும் ஊர்வலமாக கிளம்பினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பாஜகவினருடன் ஊர்வலமாக ஆளுநர் மாளிகையை நோக்கி எதியூரப்பா நடந்தார். அதன் பின்னர் எம்.எல்.ஏக்களுடன் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி ஒப்படைத்தார் எதியூரப்பா.
பதவி விலகிய எதியூரப்பா இன்று நடத்திய ஊர்வலம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
ராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஆளுநர்
எதியூரப்பா ராஜினாமா கடிதத்தைப் பரிசீலித்துப் பார்த்த ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக பின்னர் ராஜ்பவனிலிருந்து அறிக்கை வெளியானது.
இதன் மூலம் தென்னிந்தியாவின் முதலாவது பாஜக அரசின் முதல் முதல்வரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications