ஒத்திகை நிகழ்ச்சியில் விபரீதம்- கண்ணீர் புகையில் சிக்கி தவித்த புதுவை முதல்வர்!
புதுச்சேரி: அதிவிரைவு அதிரடி படையினர் நடத்திய ஒத்திகையின் போது, புதுச்சேரி முதல்வர் புகையில் சிக்கி தவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில், பதட்டம் நிறைந்த பகுதிகளை கண்டறிந்து கலவரத்தை அடக்குவது குறித்த ஒத்திகையை, அதிவிரைவு அதிரடிப் படையினர் செய்து காட்டினர்.
அப்போது சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு, காவரி வெள்ளப் பெருக்கை தடுக்க கோரும் கும்பல் ஒன்று போராட்டம் நடத்துவது போலவும், அதை அடக்க அதிரடி படையினர் கையாளும் 6 வகையான வியூகங்கள் குறித்தும் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நிகழ்ச்சியை மேடையில் இருந்தவாறு பார்வையிட்டார்.
மைதானத்தில் கூடியிருந்த கூட்டத்தை கலைக்க, போராட்டக்காரர்கள் மீது அதிரடிப் படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அதிலும் கலையாத போராட்டக்காரர்கள், அதிரடி படையினர் மீது கற்களை வீசினர். அவர்களை கலைக்க, அதிரடி படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அப்போது குண்டுகளின் புகை காற்றில் திசை மாறி ரங்கசாமி பக்கம் வீசியதால், மேடையில் அமர்ந்திருந்து பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, டி.ஜி.பி.சுக்லா, எஸ்.பி., சந்திரன் உள்ளிட்டோர் கண்ணீர் புகையில் சிக்கினர். அனைவரும் கண் எரிச்சல் ஏற்பட்டு, கண் கலங்கினர். இதனால் அங்கு பரபரப்பாகி விட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், முதல்வர் மற்றும் உயரதிகாரிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். கண் எரிச்சலை போக்க தண்ணீர் கொண்டு முகத்தை கழுவியும் எரிச்சல் குறையததால், முதல்வர் ரங்கசாமி உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஒத்திகையைப் பார்க்க வந்த முதல்வர் கண் கலங்கிச் சென்றது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications