பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து 10 வயது மாணவன் பலி
தாம்பரம்: தாம்பரம் அருகே பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து 10 வயது மாணவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ராஜ அய்யர் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். கூலித்தொழிலாளி. அவருக்கு சரவணன்(10), சதீஷ்(7) என்ற 2 மகன்கள்.
சரவணன் வீட்டுக்கு அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் தனது தம்பி உள்பட 4 பேருடன் தான் படிக்கும் பள்ளி மைதானத்தில் விளையாடச் சென்றான்.
விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் தாம்பரம் நகராட்சி சார்பில் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அன்மையில் பெய்த மழையால் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது.
பள்ளம் இருப்பதைக் கவனிக்காமல் சிறுவர்கள் விளையாடினர். அப்போது சரவணன் அந்த பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்த சதீஷ் உள்ளிட்ட சிறுவர்கள் பயத்தால் அலறினர். உடனே பள்ளிக்கு அருகில் கட்டிடப் பணி செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து சரவணனை மீட்டனர். ஆனால் அதற்குள் சரவணன் இறந்துவிட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications