நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி- 2வது நாள் கூட்டமும் அலுவல் இன்றி பாதிப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று லோக்சபாவில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் ராஜ்யசபாவில் கூட்டம் தொடர்ந்தது. இருப்பினும் ஊழல் பிரச்சினைகள் குறித்து குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நேற்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று 2வது நாள் கூட்டம் தொடங்கியது. ஆனால் கூட்டம் தொடங்கியதுமே லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் ஊழல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், கல்மாடியை காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவராக நியமித்தது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும்.எனவே கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் குதித்தனர்.
லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை முன்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார். இதே நிலைதான் ராஜ்யசபாவிலும் தொடர்ந்ததால் அங்கும் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் இரு அவைகளும் மீண்டு்ம் கூடியபோதும் இதே அமளியே நீடித்தது. இதையடுத்து நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முழு தொடரும் அலுவல் நடைபெறாமல் ஸ்தம்பித்து் முடங்கிப் போனது. இந்த ஆண்டும் அதே கதிதான் ஏற்படுமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இடதுசாரிகள், அதிமுகவின் ஒத்திவைப்புத் தீர்மானம்
இதற்கிடையே விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கேள்விநேரத்தை ஒத்தி வைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி இடதுசாரிகள், அதிமுக, பாஜக, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இந்த ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸை அவை அளித்துள்ளன.












Click it and Unblock the Notifications