ஒசாமா வீட்டின் 'செட்' போட்டு பயிற்சி எடுத்த அமெரிக்கப் படைகள்!

கடந்த மே 2ம் தேதி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த வீடு மீது தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றனர் அமெரிக்க கடற்படையின் ரெட் ஸ்கூவாட்ரன் சீல் பிரிவினர் (Red Squadron of navy SEALs).
ஆனால், இந்தத் தாக்குதலுக்காக சுமார் 50 சீல் படையினருக்கு ஏப்ரல் 10ம் தேதி முதல் பயிற்சி தரப்பட்டது. வடக்கு கரோலினா மாகாணத்தில் காட்டுப் பகுதியில் ஒசாமா பின் லேடனின் அபோடாபாத் வீடு காம்பவுண்ட் போன்ற செட் அமைக்கப்பட்டு, அதில் இவர்கள் பயிற்சி எடுத்தனர்.
இவர்களுடன் பின்லேடனின் வீடு மீதான தாக்குதலில் பங்கேற்க பெல்ஜியன் மலிநோய்ஸ் வகை நாயும் பயிற்சியில் ஈடுபட்டது.
ஆனால், இந்தப் பயிற்சியின்போது ஒசாமா பின் லேடனை தாக்கப் போவது குறித்து 2 கமாண்டர்கள் தவிர, வேறு எந்த வீரரிடமும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இங்கு 5 நாட்கள் பயிற்சி எடுத்த வீரர்கள், ஏப்ரல் 18ம் தேதி நெவாடா பாலைவனப் பகுதியில் ஒரு வாரம் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கும் பின்லேடனின் வீடு செட் போடப்பட்டிருந்தது. இந்த பயிற்சிகள் அனைத்துமே இரவில் தான் நடந்தன.
இந்த பயிற்சியை அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ மறைமுகமாக கண்காணித்தது. ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் இருந்து மே 2ம் தேதி இரவு அபோடாபாத்துக்கு ஹெலிகாப்டர்களில் கிளம்பியபோது தான், எதற்காக செல்கிறோம் என்ற விவரம் இந்த வீரர்களிடம் சொல்லப்பட்டதாம்.
இந்தப் பயிற்சிக்கு நெப்டியூன்ஸ் ஸ்பியர் (நெப்டியூனின் திரிசூலம்) என பெயரிடப்பட்டிருந்தது என நியூயார்க்கர் மேகசீன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications