ரூ. 25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தலைமைச் செயலக செய்தியாளர்கள் அறை-ஜெயலலிதா திறந்து வைத்தார்
தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்க வரும் நிருபர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோரின் வசதிக்காக அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது தனி அறை ஒதுக்கி வசதி செய்து தரப்பட்டது.
இந்த அறை தற்போதைய சூழ்நிலையில் பெருகி வரும் செய்தியாளர்கள் எண்ணிக்கை காரணமாக இட நெருக்கடிக்குள்ளாகியது. மேலும் பல்வேறு வசதிக் குறைபாடுகளும் இருந்து வந்தன. இதையடுத்து அந்த அறை கீழ்த் தளத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு போன பின்னர் அது புனரமைக்கப்படாத நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் முதல்வர் பொறுப்பில் மூன்றாவது முறையாக அமர்ந்த முதல்வர் ஜெயலலிதா ரூ. 25 லட்சம் நிதியை ஒதுக்கி செய்தியாளர்கள் அறையை புதுப்பிக்க உத்தரவிட்டார்.
அதன்படி புதிய செராமிக் டைல்ஸ் பதித்து அறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுவர்கள் அலங்கரிக்கப்பட்டு, புதிய மேசை, நாற்காலிகள் போடப்பட்டு, ஏசி வசதி செய்யப்பட்டு, டிவி வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடியதாக படு ஜோராக மாற்றப்பட்டுள்ளது செய்தியாளர் அறை.
இங்கிருந்தபடியே சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகளைக் கேட்க ஸ்பீக்கர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட அறையை நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.