முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
சேலம்: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் திமுகவினர் நடனமாடி அவதூறை ஏற்படுத்தினர். இதை போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று அதிமுக வக்கீல் மணிகண்டன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி ராமானுஜத்தை நேரில் சந்தித்து அவர் புகார் கொடுத்தார்.
அதில், "முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிலஅபகரிப்பு வழக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த மாதம் 25-ந் தேதி அன்று சரண் அடைந்தார்.
3 நாட்கள் அவரிடம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் இறுதிநாளான 27-ந் தேதி அன்று தமிழக முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு அலங்கோலமான காட்சி தி.மு.க.வினரால் அரங்கேற்றப்பட்டது.
சேலம் மாநகர உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் வேடமிட்ட ஒருவர் வீதியில் வந்து நடனமாடினார். திமுகவினர் அவரை சுற்றி நின்று கொண்டு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். தமிழக முதல்வரையும் அவதூறாக பேசினர்.
ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இதை யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகம் ஆபாசமாக பேசிய புகார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் சி.டி.க்களை இதனுடன் இணைத்துள்ளேன். எனவே பெண் வேடமிட்டு நடனம் ஆடியவர், ஆபாசமாக பேசியவர்கள் மீதும் இப்போராட்டத்தை தூண்டிய வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வேடிக்கை பார்த்த போலீசார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications