தயாரிப்பாளர் சங்கத்துக்கு உடனே தேர்தல் நடத்தாவிட்டால் உண்ணாவிரதம்! - கே ராஜன்
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு உடனடியாக தேர்தல் நடத்தாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக எச்சரித்துள்ளார் தயாரிப்பாளரும் தடாலடி அறிக்கைகளுக்கு சொந்தக்காரருமான கே ராஜன்.
தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை நடத்தி வரும் கே.ராஜன் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை:
"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர் தாக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த நிர்வாகத்தில், கேள்வி கேட்கக்கூட பயந்து கொண்டிருந்த உறுப்பினர்களில் சிலர், இன்று தைரியத்துடன் கேள்வி கேட்கிறார்கள் என்றால், சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் பேச்சுரிமையும், சுதந்திரமும் சங்க உறுப்பினர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
இந்த சுதந்திரம் செயற்குழுவில் புகுந்து உறுப்பினரை அடிக்கின்ற அளவுக்கு மாறக்கூடாது. இப்போது பொதுக்குழுவை கூட்டினால் மறுபடியும் அடிதடி கலாட்டா நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே உடனடியாக செயற்குழுவை கூட்டி, தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் வருகிற 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.''
இவ்வாறு கே.ராஜன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications