எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை, பதவி-பரிசு வேண்டாம்: திருமா

தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன்,
தமிழ் ஈழத்துக்காக உங்களோடு கைகோர்த்து நிற்பதற்கு எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும். இதற்காக நான் போராடி கொண்டிருக்கிறேன். எங்கள் கட்சியின் தோழர்களை மதித்து அவர்களின் எண்ணங்களை மதித்து அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு நெருக்கடி நிலையில் நின்று கொண்டிருக்கிறேன்.
கட்சியை கலைத்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு தம்பி வா என்று அழைத்தால் வர தயாராக இருப்பவன் திருமாவளவன். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. குடும்ப வாழ்க்கை இல்லை. எனக்கு பதவி வேண்டாம். பரிசும் வேண்டாம். நான் மிகவும் சாதாரணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் துறக்க நான் தயாராக இருக்கிறேன்.
தந்தை பெரியாரைப் போல எந்த பதவியும் இல்லாமல், எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றுவோம் என்று அழைத்தால் இந்த நொடியே நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த 25 ஆண்டுகாலமாக நான் பாடுபட்டு உருவாக்கியிருக்கிற இந்த அமைப்பு. அமைப்பைச் சார்ந்த பொறுப்பாளர்கள். பொறுப்பாளர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் இவற்றையெல்லாம் நான் கவனத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடியில் நின்று கொண்டிருக்கிறேன்.
ஆகவே எதிர்காலத்தில் எப்படி நாம் இணைந்து பணியாற்றுவது என்பது பற்றி இன்னும் கூடிக் கூடி விவாதிப்போம், பேசுவோம். ஆனால் எந்த விவாதமும் தேவையில்லை. ஈழத்திற்கான களத்தில், மொழியை காப்பாற்கான களத்தில், தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கான களத்தில் நிபந்தனையற்ற முறையில் நான் கைகோர்த்து நிற்க தயாராக இருக்கிறோம்.
தமிழ் இனம் விடுதலைப் பெற்றுவிடக் கூடாது என்று கருதுகிற கட்சிகள் எவை. தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று போராடுகிற சக்திகள் எவை. இவற்றை மக்களிடைய அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமை.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மாறாத வரையில், இந்திய அரசு ஒருபோதும் தமிழ் ஈழம் வென்றெடுப்பதற்கு துணை நிற்காது. சர்வதேச அழுத்தம் ஏற்படாத வரையில் இந்திய அரசு ஒருபோதும் வெளியுறவுக் கொள்கையை மாற்றிக் கொள்ளாது.
பாமக தலைமையிலே தமிழீழ ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக உருவாக வேண்டும் என்பது 2009ல் நான் சொன்னேன். வேண்டுகோளாகத்தான் வைத்தேன்.
நம்முடைய ஆதரவு சக்திகளையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும். அதுதான் நமக்கு முக்கியம். ராமதாஸ் ஐயா எந்த அணியில் இருந்தாலும், திருமாவளவன் எந்த அணியில் இருந்தாலும் தமிழ் ஈழ ஆதரவு அணி என்று எந்த அணியில் இருந்தாலும் பேசட்டும். அதுதான் முக்கியம்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான போராட்டம். அது அதிமுக ஆதரவு போராட்டமா. திமுக ஆதரவு போராட்டமா அல்ல. தமிழ்நாட்டில் இன்றைக்கு அப்படித்தான் இங்கே இருக்கக்கூடிய தமிழின உணர்வாளர்கள் தமிழ் ஈழ ஆதரவு என்கிற பெயரால் தமிழ் ஈழத்துக்கு எதிரான நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்றைக்கு இது எப்படி மாறிவிட்டது என்றால், சிங்களவனை எதிர்ப்பதற்கு பதிலாக, ராஜபக்சேவை எதிர்ப்பதற்கு பதிலாக, இந்திய அரசை எதிர்ப்பதற்கு பதிலாக, சோனியா காந்தியை எதிர்ப்பதற்கு பதிலாக, அவர்களது அரசியலை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, திருமாவளவன் போன்ற சில தனி நபர்களை விமர்சிக்கின்ற அளவுக்கு இது சுருக்கப்பட்டுவிட்டது.
இன்றைக்குக் கூட நான் தயார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய. அது ஒன்றும் பெரிய மகுடம் இல்லை. அதனால் ஒரு பயனும் கிடையாது. அது காலில் உரலை கட்டிக்கிட்டு நடக்கிற மாதிரி. யாராவது சொன்னால்தான் எனக்கு ஞாபகமே வருகிறது, நீ எம்பி என்று சொன்னால்தான் ஞாபகமே வருகிறது.
நீ நாடாளுமன்றத்துக்கு போகவில்லை. டெல்லிக்கு போகவில்லையா. ஆயிரத்தெட்டு வேலை நமக்கு. இந்த கருத்தரங்கை நாளைக்கு நடத்துவதாக இருந்தோம். வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத்தில் போய் உட்கார்ந்து வருவோமே. பள்ளிக்கூடத்தில் போய் உட்கார்ந்து வருவதுபோல் உட்காந்த்துவிட்டு வருவோமே. அங்க நினைதத மாதிரியெல்லாம் பேசிவிட முடியாது. அதைப்பற்றி பேசினால் வேறுமாதிரி போகும். நேரமாகும். நாக்கு வழிக்கக்கூட பயன்படாத பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி. அதற்காக எல்லாம் திருமாவளவன் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. இரண்டரை வருடம் மிச்சம் இருக்கும்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவன் திருமாவளவன். பதவி, அந்த ஆசை, இந்த ஆசை என்பதற்கு எல்லாம் போகவில்லை.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். பாஜக ஆண்டபோதும் அதுதான் கொள்கை. காங்கிரஸ் ஆளுகிறபோதும் அதுதான் கொள்கை.
இந்துக்களுக்கான கட்சி என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொள்கிற பாஜக என்றைக்காவது அங்கே அழிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள் என்று கோபப்பட்டது உண்டா?. அங்கே இடிக்கப்படுகின்ற கோயில்கள் இந்து கோயில்கள் என்று ஆத்திரப்பட்டது உண்டா?. பாஜக இந்த நாட்டை நான்கு முறை ஆளவில்லையா. என்றைக்காவது ஒருமுறையாவது அவர்கள் வெளியுறவுக் கொள்கையிலே மாற்றத்தை கொண்டுவந்தது உண்டா?.
ஒரு வாதத்திற்காக நான் சொல்லுகிறேன். இந்தியாவை ஆண்ட பாஜகவும் சரி, ஆண்டுக்கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் சரி, இது காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்ற பாஜக. அது பாஜக என்று அழைக்கப்படுகின்ற காங்கிரஸ் கட்சி. அவர்கள் வெளிப்படையான மதவாத சக்திகள். இவர்கள் மறைமுகமான மதவாதிகள். அவர்களின் கொள்கையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். இவர்களின் கொள்கையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். ராஜபக்சேவின் கொள்ளையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான்.
தமிழ் ஈழத்தை தமிழ்நாட்டில் ஆதரிப்பவர்கள் யார்?. இன்று சட்டமன்றத்தில் அம்மா தீர்மானம் நிறைவேற்றிவிட்டார். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று. எத்தனையோ தீர்மானங்கள் அப்படி நிறைவேற்றப்பட்டுவிட்டன. எல்லாம் அவை குறிப்புகளாகத்தான் இருக்கின்றன. நான் கேட்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவிலே தமிழ் ஈழம் தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதிமுக நண்பர்களை பார்த்து நான் கேட்கிறேன். அம்மாவை பார்த்து நான் கேட்கிறேன்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்த இனம் நசுக்கப்பட்டிருக்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறது. அழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையிலே மீண்டும் ஒற்றை ஆட்சியின் கீழ் சம உரிமை என்பது பொருந்தாது. அது நடைமுறைக்கு ஒத்துவராது. புலிகள் அங்கே இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களின் தேவை தமிழ் ஈழம் தான். எங்களின் ஒரே கோரிக்கை தமிழ் ஈழம்தான். வெளிப்படையாக அந்த தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக முன்வருமா?.
எம்ஜிஆர் தலைமையில் இருந்த அதிமுக வேறு. அன்று இருந்த இந்திய அரசியல் சூழல் வேறு. ஆனால் அம்மா தலைமை ஏற்ற பிறகு, தமிழ் ஈழ விடுதலை தொடர்பாக என்ன நிலைப்பாடு?.
தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லுகிற திமுக. பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் திமுக இன்று ஒரு சூழ்நிலை கைதி. தனி ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றினாலும், அதிமுகவின் நிலை என்னவோ அதுதான் திமுகவின் நிலை என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications