சிபிஐ அதிகாரி போல நடித்து மக்களிடம் பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
கரூர்: சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த நபரை கரூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் வீரமாத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இவர், தன்னை ஒரு வருமான வரி அதிகாரி, சிபிஐ அதிகாரி என கூறி வந்துள்ளார். அதன்மூலம், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரை மிரட்டி, அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்தார்.
இந்நிலையில், தென்னிலை பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்ற வியாபாரியிடம், தன்னை சிபிஐ போலீஸ் என கூறி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர் பணம் தர மறுத்ததை அடுத்து, கடத்தி சென்று பணம் பறித்துள்ளார். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிந்தனர்.
கரூர் கலெக்டர் ஷோபனாவின் உத்தரவின் பேரில், செந்தில்குமாரை தென்னிலை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.