1965ல் குஜராத் முதல்வர் விமானத்தை சுட்ட பாக். விமானி மன்னிப்பு கேட்டு இமெயில்
இஸ்லாமாபாத்: 1965-ம் ஆண்டு போரின்போது குஜராத் முதல்வர் சென்ற விமானத்தை சுட்டுத் தள்ளிய பாகிஸ்தான் விமானி 46 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருக்கையில் அப்போதைய குஜராத் முதல்வர் பல்வந்த்ராய் மேத்தா, அவரது மனைவி சரோஜ்பென் மேத்தா, 3 அரசு அதிகாரிகள், விமானப் பணியாளர், குஜராத் சமாச்சார் நிருபர், ஏர் இந்தியா விமானி ஜஹாங்கீர் என்ஜினியர் ஆகியோர் சென்ற விமானம் பாகிஸ்தானியர்களால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவருமே பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நடந்து 46 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்த விமானத்தை சுட்ட பாகிஸ்தான் விமானி குவாய்ஸ் ஹுசைன், ஜஹாங்கீர் என்ஜீனியரின் மகளுக்கு மன்னிப்புக் கேட்டு இமெயில் அனுப்பியுள்ளார்.
இது குறித்து ஹுசைன் பிடிஐக்கு கூறியதாவது,
அப்போது போர் நடந்து கொண்டிருந்தது. விமானத்தை சுட்டவுடன் ஒரு எதிரியை அழித்தாகிவிட்டது என்று நினைத்து மகிழ்ந்தோம். எனது சகாக்கள் என்னைப் பாராட்டினார்கள். இந்த சம்பவம் மாலை 4 மணிக்கு நடந்தது.
7 மணிக்கு ஏர் இந்தியா ரேடியோவில் குஜராத் முதல்வர் சென்ற விமானம் சுட்டுத் தள்ளப்பட்டது என்று செய்தி வந்ததைக் கேட்டு நாங்கள் வருத்தமடைந்தோம். உளவு பார்க்கும் விமானம் என்று நினைத்து தான் சுட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications