ஊழல் புகாரில் சோனியா காந்தியும் சீக்கிரமே சிக்குவார்: பொன்.ராதாகிருஷ்ணன்
ராமேஸ்வரம்: பல்வேறு ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். விரைவில் இந்த அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் ஊழல் புகாரில் சிக்குவார் என்று தமிழக பா.ஜ.க.தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் கங்கை பாதுகாப்பு குழு சார்பில் ராமநாதசுவாமி கோயிலில் ருத்ரஜப வேள்வி நடந்தது. இந்த வேள்வியில் கலந்து கொண்ட பின், பா.ஜ.க.மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கிறது. இந்நிலை நீடித்தால், ஏற்கனவே நாங்கள் அறிவித்தது போல் கச்சத்தீவில் தேசிய கொடியேற்றும் போராட்டம் நடத்தப்படும். இந்தியர்கள் எவரையும் தாழ்த்தி பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் தகுதி இல்லை. சீனாவோடு சேர்ந்து இலங்கை செய்யும் துரோகத்திற்கு இந்தியா துணை போக்க கூடாது.
அருணாச்சலம், சிக்கிம், கச்சத்தீவு, இலங்கையில் ஆளுமையை செலுத்தி வரும் சீனா அடுத்து தமிழகத்தையும் தன்னுடையது என கூறுவதற்கு இடம் அளித்து விடக்கூடாது. கடல் முற்றுகை போராட்டம் நடத்திய என் மீது ராமேஸ்வரம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு, பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவோம். தற்போது நாட்டில் நிலவி வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைதாகி வருகின்றனர். விரைவில் இந்த ஊழல் புகாரில் காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியாகாந்தியும் சிக்குவார், என்றார்.












Click it and Unblock the Notifications