சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 10,000 போலீஸ் பாதுகாப்பு

நாடு முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கோட்டையைச் சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது.இங்குதான் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைக்கவுள்ளார்.
இப்போதிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே நூற்றுக்கணக்கான ரவுடிகள், சமூக விரோதிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விட்டனர். விடிய விடிய இரவு முழுவதும் ரோந்து மற்றும் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
விடுதிகள், ஹோட்ல்கள் உள்ளிட்டவை தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். உடமைகள் சோதனையிடப்படுகின்றன.
ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்படலாம் என்பதால் நீண்ட தூர ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படுகிறது.
கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய மத வழிபாட்டுத் தலங்களும் தீவிர பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications