காங்கிரஸ் கோஷ்டியினர் கட்டி அணைத்து நட்புடன் பழக வேண்டும்: ஈவிகேஸ் இளங்கோவன்
விருதுநகர்: காங்கிரஸில் அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று இருப்பதால் ஒருவரையொருவர் பார்த்தால் கூட சிரிப்பது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். ஒருவரையொருவர் கட்டி அணைத்து நட்புடன் பழக வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விருதுநகர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பெண்கள் வளர்ந்து வருகின்றனர். 33 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக்குமாறு கேட்கின்றனர். அது விரைவில் நடக்கும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி மேலிடம் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. அதற்காக நான் ஒன்றும் வருத்தப்படவில்லை.
எனக்கு மேலிடத்தின் மீது கோபம் இருந்தாலும் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. கட்சி நன்றாக இருந்தால் தான் இந்தியா நன்றாக இருக்கும். இந்தியா நன்றாக இருந்தால் தான் தமிழ் நாடு நன்றாக இருக்க முடியும். கடந்த 1967-ம் ஆண்டு இழந்த பெருமையை நாம் மீண்டும் பெற்றேத் தீர வேண்டும்.
காந்தியடிகள், காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்காக சிறைக்கு சென்றனர். அது தியாகம். தற்போதுள்ள தலைவர்களும் சிறைக்குச் செல்கின்றனர். ஆனால் அதற்கு வேறு காரணம் உள்ளது.
காங்கிரஸில் அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று இருப்பதால் ஒருவரையொருவர் பார்த்தால் கூட சிரிப்பது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். ஒருவரையொருவர் கட்டி அணைத்து நட்புடன் பழக வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.