என்னை கைது செய்து சிறையில் அடைத்த கருணாநிதிக்கு நன்றி: சீமான்
நெய்வேலி: என்னைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்ததால்தான் எனது சகோதரர்களான பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரை சந்திக்க நேர்ந்தது. இதற்காக கருணாநிதிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
நெய்வேலியில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியன், திராவிடன் என்று கூறி நாம் ஏமாந்தது போதும். மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தமிழக மீனவர்களை அவ்வப்போது தாக்கி கொலை செய்யும் இலங்கை அரசை கண்டிக்க வேறு மாநிலங்களில் இருந்து குரல் கொடுப்பவர் உண்டா? ஏன் இந்திய அரசு கண்டிக்கிறதா?
வேலூர் சிறையில் என்னை அடைத்தபோது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய எனது சகோதரர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அதன்மூலம் அவர்களின் சிறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். இந்த வாய்ப்பை தெரிந்தோ, தெரியாமலோ எனக்குக் கொடுத்த கருணாநிதிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தி அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்று, அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளனர். இது ரத்து செய்யப்படவேண்டும் என்று பேசினார் சீமான்.












Click it and Unblock the Notifications