யாராக இருந்தாலும் அமைதியை சீர்குலைக்கும் போராட்டங்களை அனுமதிக்க முடியாது-ப.சிதம்பரம்

அன்னா ஹஸாரே கைது குறித்து ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவருடன் அமைச்சர்கள் கபில் சிபல், அம்பிகா சோனி ஆகியோரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
ப.சிதம்பரம் பேசுகையில், அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நிபந்தனைகளுடன் டெல்லி காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால் நிபந்தனைகளை ஏற்க மறுப்பதாகவும், தடை உத்தரவுகளை மீறுவோம் என்றும் அன்னா ஹஸாரே குழு அறிவித்தது.
இதையடுத்து அன்னா ஹஸாரேவை நேரில் சந்தித்து விளக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது முடியவில்லை.
உண்ணாவிரதத்திற்கு நிபந்தனைகளை விதித்தது டெல்லி காவல்துறைதான், மத்திய அரசு அல்ல. அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்களை தடுக்க நாங்கள் ஒருபோதும் முயற்சித்ததில்லை.அதேசமயம், அமைதியை சீர்குலைக்கும் போராட்டங்களை, அதில் யார் ஈடுபட்டாலும் அதை அனுமதிக்க முடியாது.
அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றதால்தான் அன்னா ஹஸாரே கைது செய்யப்பட்டார். தடை உத்தரவுகளை அவரது குழுவினர் மீறியதால்தான் கைது செய்யப்பட்டனர். காவல்துறை விதிமுறைப்படிதான் நடந்து வருகிறது.
அன்னா ஹஸாரே தடை உத்தரவுகளை மீறுவோம் என்று அறிவித்ததால் குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபடலாம் என்று கருதி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் இதுவரை 1200 முதல் 1300 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் சத்ரசால் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனநாயகத்தில் யாராவது தடையை மீறுவதாக கூறினால் அது ஏற்றுக் கொள்ள முடியாதது. கைது செய்யப்பட்ட அன்னா ஹஸாரே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications