நெல்லை அருகே மைனர் பெண்ணின திருமணத்தை நிறுத்திய போலீசார்
நெல்லை: நெல்லை அருகே 15 வயது பெண்ணுக்கு 2 குழந்தைகளின் தந்தையுடன் நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குழியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 10 பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு 5 பிள்ளைகளும் உள்ளனர். அதிக குழந்தைகள் காரணமாக கிருஷ்ணன் வறுமையில் வாடினார்.
அவரது 15 வயது மகளான ராஜேஸ்வரி அப்பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த ரஜினி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ரஜினிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டதால் அவர் கேரளாவில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 15 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சமூக நல அமைப்புக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் மாவட்ட சமூக நல அலுவலர் உமா தேவிக்கு தகவல் தெரிவித்தனர்.
சமூக நலத்துறையினர் எஸ்பி விஜயேந்திர பிதாரி, சரணாலயத்தி்ல் உள்ள குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் கொடுத்தனர். எஸ்பி உத்தரவின் பேரில் வீரவநல்லூர் மற்றும் அம்பை போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். சரணாலய சைல்டு லைன் திட்டக்குழுவும் அப்பெண்ணுக்கு அறிவுரை கூறியது.
திருமணத்திற்காக பெண்ணும், பெண் வீட்டாரும் கேரள செல்லவிருந்தபோது அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 18 வயதுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்யக் கூடாது என அவரது பெற்றோரிடம் எழுதி வாங்கினர். ராஜேஸ்வரி நெல்லையில் உள்ள சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மைனர் பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்த சம்பவம் வீரவநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications