மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமான தியேட்டர் உரிமையாளர் கைது
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவரும், திமுக பொதுக் குழு உறுப்பினருமான மின்னல்கொடி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மின்னல்கொடியின் கூட்டாளி பொட்டுக்காரன் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது 40 சென்ட் நிலத்த மோசடியாக பதிவு செய்து ஏமாற்றியதாக புகார் எழுந்ததன் பேரின் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் மின்னல்கொடிக்கு இரண்டு தியேட்டர்கள் உள்ளன. சினிமாக்காரர்களுக்கு பைனான்ஸும் கொடுத்து வருகிறார். திமுக பொதுக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்த நிலையில் உச்சம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் மின்னல்கொடி என்பவர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், ராஜபாளையத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை மோசடியாக தனது பெயரில் பதிவு செய்து விட்டார் மின்னல்கொடி என புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து மதுரை குற்றப் பிரிவு போலீஸார் மின்னல்கொடி மற்றும் அவரது நண்பர் பொட்டுக்காரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்காக இரண்டு பேரையும் ராஜபாளையம் அழைத்துச் சென்றுள்ளனர்.