சிபிஐ அறிக்கையில் ராஜசேகர ரெட்டி பெயர்-ஆந்திர அரசைக் கவிழக்கப் போவதாக ஜெகன் மிரட்டல்

அன்மையில் சிபிஐ அதிகாரிகள் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் உடைமைகளை சோதனை செய்தனர். இதையடுத்து ஜெகன் தனது தந்தை ராஜசேகர ரெட்டி முதல்வராக இருக்கையில் அவர் பதவியைப் பயன்படுத்தி சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆந்திர காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஜெகன் வீட்டில் நடந்தது. அதில் சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் ராஜசேகர ரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தகவலை காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. அதை கண்டித்து நான் எனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறேன் என்றார்.
இதே விவகாரத்திற்காக கே.சுரேகா, ஜே.ஜே.சுதா, சத்யதி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதாக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்தார்.
மற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று பேரவைத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் 29 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் கிரண் குமார் ரெட்டியின் அரசுக்கு ஆபத்தாகிவிடும். ராஜசேகர ரெட்டியை அவமதித்துள்ள ஆந்திர அரசைக் கவிழ்க்கப் போவதாக ஜெகன் மிரட்டல் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications