பிரணாப், அத்வானி வீடுகளை முற்றுகையிட்ட அன்னா ஆதரவாளர்கள்: இன்று அசாருத்தீன் வீடு

மக்கள் தங்கள் தொகுதி எம்.பி.க்கள் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று அன்னா ஹஸாரே கூறியிருந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்னா ஆதரவாளர்கள் 80 பேர் டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
நேற்று பாஜக தலைவர் அத்வானி வீட்டுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்டோர் கூடினர். வீட்டில் இருந்த அத்வானி வெளியே கூடிய மக்களிடம் சுமார் 30 நிமடங்கள் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
அன்னா ஹஸாரேவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவை பாஜக வரவேற்கவேயில்லை. ஏனென்றால் அது பலவீனமானது. மேலும், அதில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.
டெல்லி, தீன் மூர்த்தி மார்க்கில் உள்ள மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலின் வீடு முன்பு தர்னாவில் ஈடுபட்ட அன்னா ஆதரவாளர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி, தல்கோத்ரா சாலையில் உள்ள மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வீட்டையும் அன்னா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் சற்று வித்தியாசமாக கைகளில் பூச்செண்டுகளையும், பூக்களையும் ஏந்தி பிரணாப் வீடு முன்பு அமைதியாக அமர்ந்து போராடினர். அமைதியான முறையில் போராடியதால் அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திணறினர்.
ஜன்பத் சாலையில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டையும் அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் விட்டுவைக்கவில்லை. ஆனால் அவர் வீட்டுக்கு முன்பு கூடிய மக்கள் காமன்வெல்த் ஊழலுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த போராட்டம் சுமார் 30 நிமிடம் நீடித்தது. சுரேஷ் கல்மாடியின் வீட்டையும் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
காஜியாபாத், ராஜ்நகரில் உள்ள பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கின் வீட்டையும் முற்றுகையிட்டனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை.
மத்திய அமைச்சர்கள் கமல்நாத், பவன்குமார் பன்சால், பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, மும்பையில் மத்திய மின்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, நாசிக்கில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சமீர் புஜ்பால் ஆகியோரின் வீடுகள் முன்பும் அன்னா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இன்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், முராதாபாத் தொகுதி எம்.பி.யுமான அசாருதீன் வீட்டையும், மகாராஷ்டிரா, பால் சௌக்கில் உள்ள மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலின் அலுவலகத்தையும் முற்றுகையிடப்போவதாக அன்னா ஆதரவாளர்கள் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications