தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர்
திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் திருப்பூர் தற்கொலை நகரம் என்று பெயர் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கோவை மாவட்டத்தோடு இணைந்திருந்து, கடந்த 2008-ம் ஆண்டு தனி மாவட்டமாக்கப்பட்ட திருப்பூரில் சமீபகாலமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பனியன் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள திருப்பூரில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து வேலை செய்கின்றனர்.
திருப்பூரில் கடந்த 2009-ம் ஆண்டு 542 பேரும், 2010ல் 570 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு கடந்த ஜூலை மாதம் வரை 357 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமலும் ஆங்காங்கே பல தற்கொலைகள் நடந்து வருகின்றன. அவற்றை கணக்கில் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
இதில் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு 315 பேரும், 2010ல் 348 பேரும், இந்தாண்டு ஜூலை வரை 216 ஆண்களும் தற்கொலை செய்துள்ளனர். மொத்த சதவீதத்தில் 61 சதவீதம் ஆண்களும், 33 சதவீதம் பெண்களும், 6 சதவீதம் சிறுவர், சிறுமியரும் அடக்கம்.
திருப்பூரில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
தொழில் வளர்ச்சியில் ஓங்கி வளர்ந்துள்ள திருப்பூரில், இயற்கையான வாழ்க்கை முறை மாறிவிட்டது. பல ஊர்களில் இருந்து பிழைப்பிற்காக வரும் மக்கள், இங்கு இயந்திர வாழ்க்கை முறைக்கு மாறிவிடுகின்றனர்.
தொழிற்சாலைகளில் வேலை பளு மற்றும் மன அழுத்தங்கள் மக்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன. ஆங்காங்கே வாழ்க்கை நெறிமுறைகளும் மாறியுள்ளது. காதல் தோல்வி, வேலையிடத்தில் மன அழுத்தம், போதைப் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களாலும் அதிகளவிலான மக்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றார்கள்.
மாவட்டத்தில் தற்கொலை தடுப்புக் குழு இருந்தும் தற்கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விவகராம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருப்பூர் தற்கொலை நகரம் என்ற பெயரைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications