ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்காக அண்டா கட்டி சமையல்
அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானில் இன்று 8வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க அன்னாவைப் பார்க்க வரும் ஆதரவாளர்களுக்காக அங்கு அண்டா கட்டி சமையல் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது.
அன்னாவின் ஆதரவாளர்களான மகேந்திர கோயல், பாரத் பூஷன் மற்றும் அனில் ஜெயின் ஆகிய 3 பேரும் சேர்ந்து அன்னாவின் சமையல் அறையைத் துவங்கி ராம்லீலா மைதானுக்கு வருபவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
இது குறித்து கோயல் கூறியதாவது,
இது வரை 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளித்துள்ளோம். ஷிப்ட் முறையில் 200 சமையல்காரர்கள் பணிபுரிகின்றனர். அன்னா ராம்லீலா மைதானில் இருக்கும் வரை மக்களுக்கு உணவளிக்கத் திட்டமிட்டுள்ளோம். சமையலுக்குத் தேவையான மாவு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பலர் நன்கொடையாக அளிக்கின்றனர் என்றார்.
நேற்று முன்தினம் மட்டும் 200 குவிண்டால் அரிசி சமைக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயின்.
டன் கணக்கில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த பல மினி டிரக்குகளை நேற்று ராம்லீலா மைதானில் காணமுடிந்தது.
இந்த மூவர் தவிர்த்து ஹரியானாவைச் சேர்ந்த ஜன் சன்ஸ்தான் சேவா சங்க் அமைப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இதுவரை 20 ஆயிரம் பேருக்கு உணவளித்துள்ளது.













Click it and Unblock the Notifications