தலைமை செயலக கட்டுமானப் பணி விசாரணை கமிஷன்-அன்பழகன் மனு தள்ளுபடி
சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமான பணியில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் கமிஷனை நியமித்ததற்கு தடை விதிக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த விசாரணைக் கமிஷனை அமைத்தது.
இதை எதிர்த்து முன்னாள் நிதியமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆணையம் நடுநிலையோடு விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை. ஜெயலலிதாவின் விருப்பப்படியே ஆணையத்தின் முடிவுகள் இருக்கும்.
விசாரணை ஆணையத்தை அமைத்துத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை ஆணையம் செயல்பட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அன்பழகன் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்பழகன் கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கவே நீதிபதி தங்கராஜ் கமிஷன் அமைக்கப்பட்டது.
அரசு நிதி விவகாரத்தில் இவருக்கு நேரிடையாக தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர் உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்துள்ளார். இதை பொது நல மனுவாக ஏற்கக்கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், சசீதரன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே அதனை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் நீதிபதி தங்கராஜ் கமிஷனுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் விஜயலட்சுமி சண்முகம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
இதற்கு இரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications