தமிழகத்தில் மரணப் படுக்கையில் காங்கிரஸ்: இல.கணேசன்
வேதாரண்யம்: தமிழகத்தில் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் மரணப்படுக்கையில் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இல. கணேசன் பேசியதாவது,
இந்தியாவில் ஊழல் மலிந்து கிடக்க காங்கிரஸ் தான் காரணம். நேரு ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து இன்று வரை ஊழல் மலிந்துவிட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் விரும்பி திமுகவை நீக்கிவிட்டு அதிமுக அரசை கொண்டு வந்தனர். இதேபோன்று மத்தியிலும் வரும் 2014 அல்லது அதற்கு முன்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வாக்காளர்கள் தயாராக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபையில் 63 இடங்கள் வேண்டும் என்று கேட்டு பெற்றது காங்கிரஸ். ஆனால் அதில் வெறும் 5 இடங்களில் தான் வெற்றி பெற்றது. எனவே, காங்கிரஸ் மரணப் படுக்கையில் உள்ளது. அதை எடுத்துச் செல்ல 4 பேர் தான் தேவை. ஆனால் இங்கு 5 பேர் உள்ளனர். கடைசி ஆள் கொள்ளிச்சட்டி தூக்கிச் செல்பவராக இருக்கலாம்.
காங்கிரஸ கட்சிக்கு அடுத்ததாக பாஜக தான் உள்ளது. வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. எனவே, மாற்றத்தை ஏற்படுத்த இதுவே நல்ல தருணம். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை.
ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் கோரிக்கை நியாயமானது தான். அதை எங்கள் கட்சி மூலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயனுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications