அன்னா எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்: ராம்லீலா மைதானத்தில் அதிரடிபடை குவிப்பு

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித மாற்றுமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பிரபல இருதய நோய் சிகிச்சை நிபுணர் நரேஷ் டிரேகன் தலைமையிலான மருத்துவர்கள் அவரது உடல் நிலையை அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.
நேற்று பரிசோதித்த அவர்கள் அன்னாவின் உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துள்ளதாகவும், உடனே அவருக்கு ஊசி வழியாக உணவு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஆனால் அன்னா எதற்கும் உடன்படவில்லை.
இந்நிலையில் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லுமாறு டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து ராம்லீலா மைதானத்தில் விரைவு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.
தன்னை யாரும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லாமல் காக்குமாறு அன்னா தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
என்னால் இன்னும் 9 நாட்கள் கூட உண்ணாவிரதம் இருக்க முடியும். உங்கள் ஆதரவு தான் என் சக்தி. நம் முயற்சி வெற்றி பெறுவதற்கு முன்பு உண்ணாவிரதத்தை முடிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, என்னை யாரும் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை அமைதியான வழியில் செய்யுங்கள். யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றார்.
மகாராஷ்டிரா தலைவர்களுடன் மட்டும் தான் பேசுவேன்: அன்னா
மகாராஷ்டிரா தலைவர்களுடன் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அன்னா ஹஸாரே. அவர் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு
வர மத்திய அரசும் முட்டி மோதத் தான் செய்கிறது. ஒன்றும் நடந்தபாடில்லை. இந்நிலையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ்
சவானை மத்தியஸ்தராக நியமித்தால் பெரு மகிழ்ச்சி என்று அன்னா தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசோ அதற்கு நேர் மாறாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்பியது. நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் ஒரு முடிவு
எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மகாரஷ்டிரா தலைவர்களுடன் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று அன்னா தெரிவித்துள்ளார். அன்னா மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள தலைவருடன் தான் இனி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அன்னா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கேஜ்ரிவாலும், கிரண்பேடியும் தான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications