தாசில்தார் மீது தாக்குதல்: அழகிரி மீது 100 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

Azhagiri
மேலூர்: சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாசில்தார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 21 திமுகவினர் மதுரை மேலூர் நீதிமன்றத்தில் 100 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்கு மு.க. அழகிரி சென்றார். கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன.

அப்போது தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் கூறவே, மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 , 341, 332, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார்.

தாசில்தார் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இந்த வழக்கில் அழகிரி முன் ஜாமீன் பெற்றார்.

ஆனால், கலெக்டர் சகாயத்தின் தூண்டுதலால் தான் திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக திமுக தரப்பு குற்றம் சாட்டியது. இந் நிலையில் தாசில்தார் காளிமுத்துவும் தன்னை யாரும் தாக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கோவிலுக்குள் தெரியாமல் செருப்புப் போட்டுக் கொண்டு சென்றுவிட்டதால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இன்று மேலூர் போலீசார், அழகிரி உட்பட 21 பேர் மீது 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்தக் குற்றப் பத்திரிகையை ஏற்பதா இல்லையா என்பது குறித்து கோர்ட் நாளை முடிவு செய்யும் என்று மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அழகிரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மண்டலத்துக்கு புதிய ஐஜி:

இந் நிலையில் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மதுரை தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

ரூ.6 கோடி நிலம் அபகரிப்பு: கோவை தி.மு.க. செயலாளர் வீரகோபால் கைது:

இந் நிலையில் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக கோவை மாநகர தி.மு.க. செயலாளர் வீரகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை அடுத்த விளாங்குறிச்சியை சேர்ந்த பெரியண்ண கவுண்டருக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான 2.35 ஏக்கர் நிலத்தை அவரது மகன் ராமலிங்கம் என்பவருக்கு விற்றார். அந்த நிலத்தை ராமலிங்கம் பிளாட் போட்டு விற்பனை செய்தார். அதில் பலர் வீடு கட்டி குடியேறினர்.

இந் நிலையில் அந்த நிலத்தை பெரியண்ண கவுண்டரின் முதல் மனைவியின் மகன் சாந்தலிங்க கவுண்டர் போலி பத்திரம் தயாரித்து கோவை மாநகர தி.மு.க. செயலாளர் வீர கோபாலுக்கு விற்பனை செய்தார்.

இதைத் தொடர்ந்து வீரகோபால் அந்த நிலத்தில் குடியிருந்தவர்களை வெளியேறுமாறு மிரட்டியனார். இதுதொடர்பாக கடந்த திமுக ஆட்சி காலத்தில் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தப் புகாரின் பேரில் சாந்தலிங்க கவுண்டர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சி மாறியதும் வீரகோபாலையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால், தன்னை கைது செய்ய தடை கோரி நீதிமன்றத்தில் வீரகோபால் மனு செய்தார். அந்த மனுவில் சாந்தலிங்க கவுண்டர் மூலம் நானும் ஏமாற்றப்பட்டுள்ளேன். என்னை ஏமாற்றி அவர் என்னிடம் நிலத்தை விற்று விட்டார். எனவே இந்த வழக்கில் என்னை சாட்சியாகத்தான் சேர்க்க வேண்டும் என்றும், கைது செய்ய தடை வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து வீரகோபாலை கைது செய்ய நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்திருந்தது. இந்த தடை ஆணை நேற்று முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை ஆவாரம்பாளையத்தில் உள்ள வீரகோபால் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

அவர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், சதி செய்தல், மிரட்டல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சிறையில் திமுகவினரை சந்தித்த ஸ்டாலின்:

இந் நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடமுருட்டி சேகர், எஸ்.ஆர்.கோபி ஆகியோரை இன்று சந்தித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+