தமிழக மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும் வசதி அறிமுகம்
கரூர்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பதிவை, இணைதளம் மூலம் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்கு தங்கள் விவரங்களை பதிவு செய்ய, மாவட்ட அலுவலகங்களில் பல மணிநேரம் முதல் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், காலவிரயம் மற்றும் தேவையற்ற அலைச்சலும் ஏற்பட்டது.
இதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு இணைதளம் மூலம் விவரங்களை பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடித்தவர்கள், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இணைதளத்தில், புதிதாக பதிவு செய்பவர்கள், ஏற்கனவே பதிந்தவர்களின் மறுபதிப்பு, கூடுதல் விவரங்களை பதிய விரும்புவோர் மற்றும் பதிப்பை புதுப்பிக்க விரும்புவோர் என பலதரப்பினருக்கான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இனி மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தவாறு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் விவரங்களை பதிந்து கொள்ளலாம்.