10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது உயிர்களைக் காக்க வலியுறுத்தி செப்டம்பர் 8ம் தேதி பத்து லட்சம் பேருடன் வேலூர் சிறையை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை அருகே மறைமலை நகரில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடந்தது. பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின.

அதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,

முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்க செப்டம்பர் 9-ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுவிக்க தமிழக முதல்வரிடம் மட்டுமே கோரிக்கை வைக்கவேண்டிய சூழல் இருக்கிறது.

முதல்வர் துரிதமாகச் செயல்பட்டு மூவரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 6-ம் தேதியில் இருந்து தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பொது மக்களை வேலூருக்குத் திரட்டுவோம். செப்டம்பர் 8-ம் தேதி 10 லட்சம் பேருடன் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்.

ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. இப்போது இம்மூவரையும் மீட்பதற்காக வேலூர் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அவசியம் என்றார்.

விடுதலைச் சிறுத்தைககள் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்,

தனக்கு எதிரானவர்கள் எந்த நாட்டை ஆண்டாலும் அவர்களை அழிப்பதைக் குறியாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. சதாம் உசேனைக் கொன்றதும் இப்படித்தான். ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச சதி உள்ளது என்று ஜெயின் கமிஷன் குறிப்பிட்டபோதும் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.

ஒருவேளை ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று இருந்தாலும், அவர்கள் எப்போதும் கூட்டுச் சதி செய்வது கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் தலைமை எடுக்கும் முடிவு அவர்களின் முக்கிய நிர்வாகிகளுக்கே சில சமயங்களில் தெரியாது.

மாபெரும் தலைவரான ராஜீவ்காந்தியைக் கொல்லும்போது பேரறிவாளனிடம் பேட்டரி வாங்கித்தான் கொல்ல வேண்டுமா? விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் இவர்களைத் தூக்கில் போடவேண்டிய அவசியம் இல்லை.

11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கருணை மனுவை இப்போது உடனடியாக நிராகரித்து அவர்களை தூக்கில் போட வேண்டிய அவசியம் என்ன? எனவே 3 பேரின் உயிரைக் காப்பாற்ற வேலூர் சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவேண்டும் என்றார்.

முன்னதாக மாநாட்டுக்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சுப. வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீர்மானம்

மாநாட்டில் ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை டாக்டர் ராமதாஸ் வாசித்தார். அதை ஆதரித்து அனைவரும் கைகளைத் தட்டி வரவேற்றனர்.

அந்தத் தீர்மானம்:

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கலிடுவது, அவர்களுக்கு இரண்டாவது தண்டனையாக அமைந்துவிடும். தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள் வழக்கறிஞர்கள், கலைத்துறையினர், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், வணிகர் சங்கத்தினர் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

மக்களின் இந்த உணர்வுகளை மதித்தும், மனித நேயத்துடனும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் தூக்கிலிடுவதற்கான நாள் குறிக்கப்பட்டு விட்டதால் அவர்களின் தண்டனையை நிறுத்திவைப்பதற்கான நிர்வாக தடையாணையை தமிழக அரசு உடனே பிறப்பிக்க வேண்டும்.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தையும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+