அமெரிக்காவில் ஐரீன் புயலுக்கு 18 பேர் பலி, லட்சக்கணக்கானோர் பாதிப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை ஐரீன் புயல் தாக்கியது. இதில் 7 மாநிலங்களில் 18 பேர் பலியாகியுள்ளனர். கன மழை மற்றும் சுறாவளிக்காற்றால் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை சுழற்றியடிக்கும் ஐரீன் புயல் நேற்று நியூயார்க்கை தாக்கியது. இதனால் நியூயார்க்கில் நேற்று காலை முதலே கன மழை கொட்டியது. தெருக்களில் 11 அடிக்கு தண்ணீ்ர் இருந்தது. ஐரீன் நியூயார்க்கை தாக்கியபோது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசியது. ஏற்கனவே லட்சக் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டனர். நியூயார்க், வடக்கு கரோலினா, வெர்ஜீனியா, புளோரிடா ஆகிய இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த கன மழை மற்றும் புயல் காரணமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமான நிலையங்கள் மூடப்பட்டன. நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட இடங்களுக்கு 7 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. ரயில் சேவை, பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் இருந்த 25 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். 90 இடங்களில் அவசரகால மையங்கள் அமைக்கப்பட்டு அதில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் நியூயார்க் நகரில் லட்சக்கணக்கானோர் இருளில் அவதிப்பட்டனர். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறவில்லை.
இந்த புயலால் பல இடங்களில் மரங்கள் விழுந்தன, கட்டிடங்கள் இடிந்தன. இதனால் 18 பேர் பலியாகினர்.
வடக்கு கரோலினா, வெர்ஜீனியா, மேரிலேண்ட், நியூஜெர்சி, நியூயார்க் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விடுமுறையில் சென்றிருந்த அதிபர் பாரக் ஒபாமா உடனே நாடு திரும்பி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்றிரவு 8 மணிக்கு ஐரீன் அமெரி்ககா-கனடா எல்லையை நோக்கி நகர்ந்தது.
புயல் தாக்கிய இடங்களில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications