என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்
சென்னை: எனது மகனை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூக்குத் தண்டனைக் கைதிகள் மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூருக்கு இன்று வந்த அற்புதம் அம்மாளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது மகனையும் மற்ற இருவரையும் முதல்வர் மீட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
முன்னதாக செங்கொடியின் மரணம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 3 பேரின் உயிரை காக்க அறப்போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் செங்கொடி தீக்குளித்து பலியானது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றார்.
மேலும் அவர் பேரறிவாளன் குறித்த உருக்கமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில்,
கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி எனது மகன் பேரறிவாளனை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்தோம். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்திருந்த பேரறிவாளன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் வேப்பேரி பெரியார் திடலில் தங்கியிருந்தான்.
அங்கிருந்துதான் அவனை அழைத்து சென்றனர். அதன் பிறகு அவனை பார்ப்பதற்கே நான் போராட வேண்டியிருந்தது. பின்னர் பல நாட்கள் கழித்து சி.பி.ஐ.கோர்ட்டில் அவனை ஆஜர்படுத்தினர். அப்போது அவனுடன் என்னால் பேச முடியவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த பின்னர் 50 நாட்களுக்கு பின்னர்தான் அவனுடன் என்னால் பேச முடிந்தது.
கிரீம்ஸ் ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து சிறிதுநேரம் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவன், என்னை பார்த்து பயப்படாதீர்கள் அம்மா. விசாரித்து விட்டு அனுப்பி விடுவதாக கூறியுள்ளனர். விரைவில் நான் வெளியில் வந்து விடுவேன் என கூறி தைரியப்படுத்தினான்.
சிறுவயதில் இருந்தே பேரறிவாளனுக்கு இரக்க குணம் அதிகம் உண்டு. யாரிடமும் அதிர்ந்து கூட பேசமாட்டான். எல்லோரையும் போல எனது மகனும் நன்றாக படித்து கார், பங்களா என வசதியுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவனது வாழ்க்கை சிறையிலேயே கழிந்து வருகிறது.
எனது மகள்கள் அன்பு மணி, அருள் செல்வி. பேரறிவாளன் சிறைக்கு சென்ற சில மாதங்கள் கழித்து அன்புமணியின் திருமணம் நடைபெற்றது. பேரறிவாளன் விடுதலை ஆகும்வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அருள்செல்வி பிடிவாதமாக இருந்தாள். அவன்தான் அருள்செல்வியை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தான்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தற்போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 3 பேரும் காப்பாற்றப்படுவார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications