நம்பகமான லோக்பால் மசோதாவுக்கு என்ன தேவை?-ராஜீவ் சந்திரசேகர்

இந்தியாவில் பெருகி வரும் ஊழல் குறித்த விவாதம் கடந்த 25ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது எம்பி ராஜீவ் சந்திரசேகர் ஆற்றிய உரையின் விவரம்:
ஆட்சித் திறன், ஊழல் ஒழிப்பு விவகாரங்களில் இந்திய மக்கள் சமீப காலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதீத ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக லோக்பால் இயக்கத்தில் பேரார்வம் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் அஹிம்சை மற்றும் அரசியல் சார்பில்லா இந்த இயக்கத்திற்கு பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் இவ்வளவு பெரிய அளவில் ஒன்று திரண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
மக்களின் பிரதிநிதிகளாகிய எம்.பி.க்களான நாம் அவர்களின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் நியாயமான முறையில் பிரதிபலிக்க வேண்டியது அவசியம்.
ஊழல் என்பது மோசமான நிர்வாகத்தால் ஏற்படும் விபரீதம். ஊழல் தான் இருப்பதிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மோசமான நிர்வாகம், தாறுமாறாக செலவு செய்வது, திட்டங்களால் ஏற்படும் உண்மையான பலன்கள் என்ன என்பது குறித்து கொஞ்சம் கூட ஆராயாமல், நலத்திட்டத்துக்கு மேல் நலத்திட்டத்தை அறிவித்து, குறிக்கோளே இல்லாமல் செலவளிப்பது தான் ஊழல் சூழலை உருவாக்கியுள்ளது.
மக்கள் பணம் மற்றும் சொத்தைப் பாதுகாக்க நிர்வாகத்தை சீர்திருத்துவதிலும், நமது அரசு செயல்படும் விதத்தை மாற்றுவதிலும் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசியல் தலையீட்டால் பெரும்பாலான அரசு நிறுவனங்களில் ஊழல் பெருகிவிட்டது. அவைகள் சீரமைக்கப்பட வேண்டும். நீதித்துறை போன்று மத்திய தணிக்கைத் துறையும் நம் நாட்டை பெருமை அடையச் செய்துள்ளது. மற்ற அரசு நிறுவனங்களும் தனித்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தான் நாம் விரும்புகிறோம்.
நாம் இங்கு விவாதிக்கும் லோக்பால் அமைப்பை, மக்களுக்கிடையே நம்பகத்தன்மை அதிகரிக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
அரசு லோக்பால் மற்றும் ஜன் லோக்பால் மசோதா ஆகியவற்றுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் குறித்து தேவையில்லாத விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர்த்து நாம் தேவைகளை மட்டும் விவாதிப்போம்.
நம்பகமான லோக்பால் அமைப்புக்கு உண்மையிலேயே தேவையானவை:
1. லோக்பால் தனி, சுதந்திர அமைப்பாக இருக்க வேண்டும்.
2. லோக்பாலுக்கு விசாரணை நடத்த போதிய அதிகாரம் இருக்க வேண்டும்.
3. லோக்பாலுக்குத் தேவையான அளவுக்கு ஆதாரங்கள் (ஆள் பலம், அலுவலக வசதிகள், நிதி ஆதாரம்) இருக்க வேண்டும்.
4. லோக்பால் ரகசியத்தை காப்பாற்ற வேண்டும்.
5. லோக்பாலுக்கு சர்வதேச- பரஸ்பர உதவி இருக்க வேண்டும்.
6. லோக்பால் சிறந்த நிர்வாகத் திறனோடு இருக்க வேண்டும்.
7. லோக்பால் அரசியலமைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட 7 அளவுகோல்களை பயன்படுத்தினால் ஜன் லோக்பால் வலுவான அமைப்பாக இருக்கும். கடுமையான சட்டங்கள் தான் ஊழலைத் தடுக்கும். ஜன் லோக்பாலின் சில அம்சங்கள் அரசியலைமைப்புக்கு ஏற்றதா என்ற கோணத்தில் இருந்து ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலையும் உள்ளதை மறுக்க முடியாது.
மக்களின் குரலைக் கேட்டு அதற்கு ஏற்ப செயல்படும் நாடாளுமன்றம் என்பதை நிரூபிக்க இது ஒரு மிகச் சிறந்த தருணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார் ராஜீவ் சந்திரசேகர்
Read in English: Seven Essentials for a Credible Lokpal Bill












Click it and Unblock the Notifications