ஜி.கே.மூப்பனாரின் 10வது நினைவு நாளில் அவரது தம்பி மரணம்
சென்னை: மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த அவரது தம்பி சம்பத் மூப்பனார், மாரடைப்பால் காலமானார்.
சம்பத் மூப்பனார், கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவிலில் வசித்து வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையிலும் இவருக்கு வீடு உள்ளது.
ஜி.கே. மூப்பனாரின் 10வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்பத் மூப்பனார் சென்னை வந்திருந்தார். நேற்றிரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 10 மணிக்கு காலமானார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த ஜி.கே. மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு மரண செய்தி தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக அவர் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தார்.
சம்பத் மூப்பனாரின் இறுதிச் சடங்கு நாளை சொந்த ஊரில் நடக்கிறது.
இதற்கிடையே ஜி.கே.மூப்பனாரின் 10வது நினைவு நாளையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications