ரம்ஜான்: ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் வாழ்த்து
சென்னை: ரம்ஜான் திருநாளையொட்டி தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈதுல்-பித்ர் எனும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பண்டிகையின் மூலம் ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம், மற்றும் அமைதி, மேம்படட்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா:
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனித குலத்திற்கு வழிகாட்டும் நபிகள் நாயகத்தின் மணிமொழியை தலைமேல் ஏற்று உடலையும் உள்ளத்தையும் ஒருமுகப்படுத்தி ஒரு மாத காலம் நோன்பிருந்து சமுதாயத்தில் ஏழைகள் மற்றும் தேவையுள்ளோர் மீது அனுதாபமும், பரிவும் செலுத்தி இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் கடமையை நிறைவாகச் செய்து மகிழ்ந்திருக்கும் இந்த இனிய வேளையில்,
அன்பு ஓங்குக, அறம் தழைத்திடுக. சமாதானம் நிலவிடுக, சகோதரத்துவம் வளர்ந்திடுக என்று கூறி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நோன்பு எனும் தவம்-வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள்.
எல்லையற்ற நிலப்பரப்பை ஆட்சி செய்தபோதிலும், ஓர் ஏழையைப் போலவே வாழ்க்கைச் சூழலை வகுத்துக் கொண்டு வாழ்ந்த அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை என்ற அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி நேர்மையுடனும், தூய்மையுடனும் செயல்படுவோம் என்று நானிலத்திற்கு அறிவிக்கும் நாள், இந்த நாள்.
இந்த இனிய நன்னாளில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
வறுமையில் வாடும் நிலை-ராமதாஸ்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவ வேண்டும் என்கிறது இஸ்லாம்.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான நல் உபதேசமாக திகழும் திரு குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமலான் மாதம். அம்மாதம் முழுவதும் நோன்பு மேற்கொண்ட ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பலர் வறுமையில் வாடும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற சச்சார் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்தும்படி மத்திய அரசை வலியுறுத்த இந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இயன்றதை செய்வோம் இல்லாவர்க்கே என்பதை குறிக்கோளாகக் கொண்டு, சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் தேமுதிக கடைபிடித்து வருகிறது. ஒரு வகையில் எங்களது கொள்கையும், இஸ்லாம் மார்க்கம் எடுத்து சொல்லும் கடமைகளும் ஒன்றிணைந்து இருப்பது பெருமைக்குரியதாகும்.
அவ்வகையில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் இந்த ரமலான் நோன்பு முடிக்கும் இந்த நன்னாளில் ஏழை, எளிய மக்களுக்கு எல்லா நலன்களும் கிடைத்திட அருள் செய்யுமாறு தேமுதிக சார்பில் எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications