ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹிக்கோ நோடா தேர்வு-காத்திருக்கிறது சவால்கள்
டோக்கியோ:ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிக்கோ நோடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 6வது பிரதமராக தேர்வாகி உள்ள நோடாவிற்கு பல சாவல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
ஜப்பானில் இந்தாண்டு நடந்த நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா அணுமின் நிலைய கதிர்வீச்சு பாதிப்பு என அடுத்தடுத்து பல பேரிழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த இழப்புகளைக் களைய முன்னாள் பிரதமர் நவோட்டோ கான் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.
புதுப்பித்தல் ஆற்றல் மசோதாவை பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற அவர், தொடர் நெருக்கடியால், கடந்த 26ம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், புதிய பிரதமராக பொறுப்பேற்க ஜப்பான் ஜனநாயக கட்சியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர். நேற்று நடந்த தேர்தல் முடிவில், நோடாவுக்கு 215 ஓட்டுகளும், காய்எடாவுக்கு 177 ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து நோடா அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டார். கடந்த 2010ம் ஆண்டு நோடா, ஜப்பானின் நிதியமைச்சராக இருந்து, நிதிநிலையை உயர்த்தியவர்.
கடந்த 5 ஆண்டுகளில், 6வது பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள நோடா கூறியதாவது, ஜப்பானில் தொடர்ந்து 5 பிரதமர்கள் மாறியுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஜப்பான் நாட்டு யென் மதிப்பு குறைந்துள்ளது. கடன் அதிகரித்துள்ளது.
ஜப்பானின் தற்போதைய முக்கிய தேவை என்பது, யென் நிலையை வலுப்படுத்தல், சுனாமி பாதிப்பை சரிசெய்தல், அணுகதிர் வீச்சு அபாயத்தை தீர்த்தல் ஆகிய 3 சாவல்கள் உள்ளன, என்றார்.












Click it and Unblock the Notifications