முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை சந்திக்க அனுமதி மறுப்பு: மு.க.அழகிரி குற்றச்சாட்டு
கடலூர்: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை சிறையில் சந்திக்க எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை, என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குற்றசாட்டி உள்ளார்.
திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக தனது நிலத்தை நேரு மிரட்டி, அடித்து உதைத்து தன்னிடம் இருந்து பறித்துக் கொண்டதாக துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜுலு உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி ஆகியோரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களை சந்திக்க மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன், மதுரை துணை மேயர் மன்னன் ஆகியோர் கடலூர் மத்திய சிறைக்கு சென்றனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை சந்திக்க சிறைத்துறை அதிகாரிகள் எனக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். மதுரை 3வது வட்ட செயலாளர் ஓச்சுபாலுவை மட்டுமே சந்திக்க அனுமதி அளித்தனர். அதனால் அவரை மட்டும் சந்திக்க முடிந்தது.
தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதுதான் அ.தி.மு.க.,வின் 100 நாள் சாதனையாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஜெயலலிதா இது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பொய் வழக்குகளை சந்திக்க தி.மு.க., தயராக உள்ளது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம், என்றார்.












Click it and Unblock the Notifications