'நய வஞ்சகர் ப.சிதம்பரம்!' - ஹஸாரே மோசமான தாக்கு

வலுவான லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் 12 நாட்களாக ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இதற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. குறிப்பாக ஹஸாரே பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்ட மக்கள் ஆதரவைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கேற்ப இப்போது, மத்திய அரசு, அமைச்சரவை, பிரதமர் என நாட்டின் உயர் அமைப்புகள் மற்றும் பதவியில் உள்ளோரை மிக மோசமாக, ஒரு அரசியல்வாதியைப் போல விமர்சித்துப் பேசி வருகிறார் ஹஸாரே.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹசாரே, தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்திக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அந்த ஊர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசுகையில், "ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்தும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளையர்கள் இடத்தை கறுப்பர்கள் பிடித்து விட்டனர். டெல்லியில் நடத்திய உண்ணாவிரதம் போலவே, அடுத்தடுத்து தொடர் அதிர்ச்சிகளை நாம் அளித்தால் மட்டுமே ஊழலற்ற இந்தியாவை கொண்டு வர முடியும். காந்தி தொப்பியை அணிந்தால் மட்டும் போதாது. ஊழலை ஒழிக்க இளைஞர்கள் கரம் கோர்க்க வேண்டும்.
வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்தினர் இந்த அரசில் (மத்திய அரசு) பிரதான இடம் வகிக்கின்றனர். என்னை உண்ணாவிரதம் இருக்க விடாமல் தடுக்க டெல்லியில் உள்ள அனைத்து மைதானங்களிலும் தடை உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது. அதன் பிறகு, ஜே.பி.பூங்காவில் அனுமதி அளித்தபோது ஏராளமான நிபந்தனைகளை விதித்தது. அதை நான் ஏற்கவில்லை.
ப.சிதம்பரம் மீது புகார்
உடனே, அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்த என்னை டெல்லி போலீசார் பிடித்துச் சென்றனர். நான் காரணம் கேட்டபோது, 'பொது அமைதிக்கு நான் குந்தகம் விளைவித்ததாக கூறினார்கள். ஆனால், 2 மணி நேரத்தில் என்னை விடுதலை செய்தனர். இரண்டு மணி நேரத்தில் அப்படி என்ன மாற்றம் நடந்து விட்டது? என்னை ஜாமீன் கேட்குமாறு கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். சிறையில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்தார்கள்.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளிக்காததால் நான் சிறைத்துறை டி.ஐ.ஜி அலுவலகத்திலேயே தங்கி விட்டேன். அங்கேயே 3 நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தேன்.
அரசில் உள்ள வஞ்சகர்களில் குறிப்பிடத்தக்கவர், ப.சிதம்பரம். இவர் நயவஞ்சகர். தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கும் நபராக அவர் இருக்கிறார்.
பலசரக்கு கடை மாதிரி உள்ளது மத்திய அரசு
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசானது, பலசரக்கு கடை போல உள்ளது. கடுமையான லோக்பால் சட்டத்தை கொண்டு வருவதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை. நம்பிக்கை துரோகம் செய்து வருகிறது. நம்முடைய சமீபத்திய போராட்டத்தால் சிறிது வளைந்து கொடுத்திருக்கிறது.
நாடு முழுவதும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இது ஆரம்பம் மட்டுமே. நாம் செல்ல வேண்டிய பாதை இன்னும் நீண்ட தூரம் உள்ளது. ஊழலை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் வரை ஆகலாம். அந்த முயற்சிக்காக, நாம் அனைவரும் சிறை செல்ல தயாராக இருப்போம்," என்றார் ஹஸாரே.
ஏற்கெனவே பாராளுமன்றத்தில் உள்ள 150 பேர் கிரிமினல்கள் என்றும், இப்போது பாராளுமன்றத்தில் உள்ள எம்பிக்களை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் ஹஸாரே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications